பரபரப்பாக பேசப்பட்ட ஹேமா கமிஷன் அறிக்கை… எந்த பலனும் இல்லை என நடிகை தனுஸ்ரீ தத்தா காட்டாம்
ஹேமா கமிட்டியின் அறிக்கையால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை என்று பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார். 2017-ல் நடந்த ஒரு விஷயத்தை பற்றி அறிக்கை தயாரிக்க அவர்களுக்கு 7 வருடங்கள் தேவைப்பட்டனவா? இந்தப் புதிய அறிக்கையினால் என்ன பயன்? அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்து சட்டத்தின்முன் தண்டிப்பதுதான் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக பரபரப்பாக பேசப்பட்ட ஹேமா கமிஷன் அறிக்கையால் எந்த பலனும் இல்லை என்று பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா காட்டமாக பேசியது வைரலாகி வருகின்றது. மலையாள சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பரவலான மற்றும் தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் நீதிபதி ஹேமா குழு அறிக்கை வெளியிடப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டார். இந்த சம்பவம் திரையுலகினரை அதிர வைத்தது. பின்னர் நடத்திய விசாரணையில் நடிகர் திலீப் தூண்டுதலின் பேரில் இந்த பலாத்கார சம்பவம் நடந்தது என்று வெளியான தகவல் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஹேமா கமிட்டி வெளியிட்ட தகவல்கள் இந்திய சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஆய்வு செய்து, 2019 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவான நீதிபதி ஹேமா குழுவினர் அறிக்கையை சமர்பித்தனர். இந்த அறிக்கையின் நகல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த கமிஷன் கடந்த 2019-ம் ஆண்டே அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இதற்கு மலையாள சினிமா உலகில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிட்டத்தட்ட 51 பேரின் வாக்குமூலத்தின்படி இந்த அறிக்கை தயாரானது.
235 பக்கம் கொண்ட அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சினிமாவில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு, சமரசம் செய்து கொண்டு இருக்க வேண்டும் என தங்களிடம் சொல்லப்பட்டதாக பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஒட்டுமொத்த மலையாள திரையுலகையே சில ஆண்கள்தான் கட்டுப்படுத்துகிறார்கள். மேலும் அவர்கள் சினிமாவில் பணிபுரியும் மற்ற நபர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சினிமாவில் இந்த நிலை மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகில் வாய்ப்புகளைப் பெற பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுகிறார்கள் என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் வாய்ப்புகளைப் பெற பல முறை பாலியல் ரீதியான சுரண்டல்கள் நடைபெறுவதாகவும், ஆபத்தான சூழல் நிலவுவதாகவும் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களின் வலைகளில் நடிகைகளை விழவைக்க முத்தம், நிர்வாணம் போன்ற காட்சிகளை ஏற்படுத்தி, அதன் வாயிலாக நடிகைகளை மிரட்டுவது, கட்டாயப்படுத்துவது போன்றவற்றையும் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. பல நடிகைகளும் எதிர்கால பயத்தால் புகார் அளிக்கவில்லை, சிலர் திரையுலகை விட்டு ஒதுங்கிவிட்டனர் எனவும் கூறப்படுகிறது. மேலும் பாலியல் தேவைகளுக்கு இணங்காதவர்களை முத்திரை குத்தி சினிமாவில் இருந்து நீக்குகின்றனர் என்றும் அதையும் மீறி புகார் அளிப்பவர்களும் சினிமாவில் இருந்து நீக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Also read… Fact Check: நடிகர் சூர்யா ரூ.120 கோடிக்கு தனி விமானம் வாங்கினாரா? உண்மை இதுதான்!
இந்த நிலையில், ஹேமா கமிட்டியின் அறிக்கையால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை என்று பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார். 2017-ல் நடந்த ஒரு விஷயத்தை பற்றி அறிக்கை தயாரிக்க அவர்களுக்கு 7 வருடங்கள் தேவைப்பட்டனவா? இந்தப் புதிய அறிக்கையினால் என்ன பயன்? அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்து சட்டத்தின்முன் தண்டிப்பதுதான் என்று தெரிவித்துள்ளார்.
பெண்களை கண்ணியமாக நடத்த வேண்டும். மக்கள் நடிகைகளை மனிதர்களாகப் பார்க்கவில்லை. எங்களை ராணிகளைப் போல நடத்த வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. கண்ணியத்துடன் நடத்தப்படுவதற்கான உரிமையும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையும் எங்களுக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.