Cinema Rewind: ஒருபக்கம் பத்மஸ்ரீ விருது.. மறுபக்கம் சாணியடி.. விவேக் வாழ்வில் நடந்த சம்பவம்!
Vivek: தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என கொண்டாடப்பட்டவர் விவேக். பல படங்களில் காமெடியனாக வலம் வந்த இவர், 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கி விட்டது.
நடிகர் விவேக்: தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என கொண்டாடப்பட்டவர் விவேக். பல படங்களில் காமெடியனாக வலம் வந்த இவர், 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கி விட்டது. சினிமா மீது இருந்த ஆர்வத்தால் அரசு வேலையை உதறி தள்ளிவிட்டு வந்து, மற்றவர்களை போல அல்லாமல் சமூகத்துக்கு தேவையான விழிப்புணர்வு விஷயங்களை காமெடி வசனம் மூலம் சொல்லி மிகப்பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கினார். அப்படியான விவேக்கிற்கு மத்திய அரசு 2009 ஆம் ஆண்டு சினிமாத்துறையில் அவரது கலை சேவையைப் பாராட்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. ஆனால் அந்த விருது வழங்கப்பட்ட அன்று அவர் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சாணி அடி சம்பவம் நடந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
சைல்ட் சின்னாவான விவேக்
இயக்குநர் சுந்தர் சி-யிடம் உதவியாளராக பல படங்களில் பணியாற்றியவர் சுராஜ். இவர் தலைநகரம் படம் மூலம் இயக்குநரானார். தொடர்ந்து மருதமலை, படிக்காதவன், மாப்பிள்ளை, கத்தி சண்டை, சகலகலா வல்லவன் அப்பாடக்கர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என பல ஆக்ஷன் படங்களை இயக்கியுள்ளார். இவரின் படிக்காதவன், மாப்பிள்ளை, சகலகலா வல்லவன் அப்பாடக்கர் ஆகிய 3 படங்களில் காமெடி கேரக்டரில் விவேக் நடித்திருப்பார். இதில் மாப்பிள்ளை படத்தில் சைல்ட் சின்னா என்ற கேரக்டரில் வித்தியாசமான பாடிலாங்குவேஜில் அவர் அசத்தியிருப்பார்.
சாணியடி சம்பவம்
மாப்பிள்ளை படத்தில் ஒரு காட்சியில் எதிரிகள் கூட்டம் விவேக் கூட்டத்தின் மீது சாணி அடிப்பது போன்ற காட்சி இருக்கும். வழக்கம்போல ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லாம் ரெடி பண்ணிவிட்டு இயக்குநர் சுராஜ் அவரிடம் காட்சியை பற்றி விவரிக்க வந்துள்ளார். அப்போது விவேக், தனக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்குவதாக அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சுராஜூக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது. “நாட்டின் உயரிய விருது வாங்கிருக்கதா சொல்றாரு.இவர் மேல் எப்படி இன்னைக்கு சாணி அடிக்க முடியும்?” என முழித்துள்ளார்.
கொஞ்ச நேரம் காத்திருந்து மெதுவாக விவேக்கிடம் இன்னைக்கு எடுக்கப்போகும் காட்சியை சுராஜ் விளக்கியுள்ளார். உடனே விவேக் எந்தவித மறுப்பும் இல்லாமல் உடனே ஓகே சொல்லி இருக்கிறார். அன்றைய நாள் முழுவதும் விவேக் முகத்தில் சாணி அடிக்கும் காட்சித் தான் எடுக்கப்பட்டுள்ளது. இடையிடையே விருது வாங்கியது தொடர்பாக விவேக்கிற்கு போன் வந்துள்ளது. அவர் வாழ்த்து செய்தியை ஒரு பக்கம் பெற, மறுபக்கம் சாணி அடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.