”அதிர்ச்சி.. எனக்கு தெரியாமல் நடந்தது”.. விவாகரத்து குறித்து ஜெயம் ரவி மீது ஆர்த்தி குற்றச்சாட்டு - Tamil News | I was deeply shocked Actor Jayam Ravis wife Aarti Reacts to separation news | TV9 Tamil

”அதிர்ச்சி.. எனக்கு தெரியாமல் நடந்தது”.. விவாகரத்து குறித்து ஜெயம் ரவி மீது ஆர்த்தி குற்றச்சாட்டு

Updated On: 

11 Sep 2024 11:55 AM

Jayam Ravi Divorce : மனைவி ஆர்த்தியை பிரிவதாக செப்டம்பர் 9ம் தேதி நடிகர் ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நீண்ட கால யோசனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் விவாகரத்து அறிவிப்பு தன் கவனத்துக்கு வராமல் நடந்ததாகவும் அது அதிர்ச்சி அளிப்பதாகவும் ஜெயம் ரவியின் மனைவி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிர்ச்சி.. எனக்கு தெரியாமல் நடந்தது.. விவாகரத்து குறித்து ஜெயம் ரவி  மீது ஆர்த்தி குற்றச்சாட்டு

ஜெயம் ரவி, ஆர்த்தி

Follow Us On

ஜெயம் ரவி கடந்த 9-ம் தேதி தனது மனைவியை பிரிவதாக வெளியிட்ட செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், இதுகுறித்து தன்னிடம் எதுவும் பேசவில்லை என்று அவரது மனைவி ஆர்த்தி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது என் கவனத்துக்கு வராமலும் என் ஒப்புதல் இல்லாமலும் எடுக்கப்பட்ட முடிவு என ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன் என்று ஆர்த்தி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மனைவி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஜெயம் ரவி பிரிந்து வாழ்ந்ததாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தது. இது குறித்து இருவரும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் நீண்ட கால யோசனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன் என்று நடிகர் ஜெயம் ரவி கடந்த 9-ம் தேதி அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்ட ஜெயம் ரவிக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் 15 வருட திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Also read… மீண்டும் பெரிய அறுவை சிகிச்சை… தொகுப்பாளினி டிடி-யின் உருக்கமான பதிவு

அந்த அறிக்கையில் அவர், ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே. நான் என்றும் எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தற்போது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் ஆர்த்தி கூறியிருப்பதாவது, சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன்.

என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல….

ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால் என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது. மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது. தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை. காலம் நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இத்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு மட்டுமன்றி நல்வழி காட்டி வரும் பத்திரிக்கை ஊடக மற்றும் ரசிகப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே என்னையும் என் குழந்தைகளையும் இந்த காலகட்டத்தில் தூணாக காத்து நிற்கும். இந்த சோதனையில் இருந்து நாங்கள் மீண்டு வர உங்கள் பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் என்று ஆர்த்தி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version