Today’s Cinema News: தீபாவளி ரிலீஸ் படங்கள் முதல் சினேகாவிற்கு பிடித்த நடிகர் வரை… டாப் சினிமா செய்திகள்! - Tamil News | top cinema news headlines for october 28th 2024 | TV9 Tamil

Today’s Cinema News: தீபாவளி ரிலீஸ் படங்கள் முதல் சினேகாவிற்கு பிடித்த நடிகர் வரை… டாப் சினிமா செய்திகள்!

இன்றைய சினிமா செய்திகள்: வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் முன்னணி நடிகர்களின் அமரன், ப்ரதர், லக்கி பாஸ்கர், ப்ளடி பெக்கர் படங்கள் முதல் நடிகை சினேகாவிற்கு மிகவும் பிடித்த நடிகர் யார் என்பது குறித்து வெளியான வரை அக்டோபர் மாதம் 28-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.

Today’s Cinema News: தீபாவளி ரிலீஸ் படங்கள் முதல் சினேகாவிற்கு பிடித்த நடிகர் வரை… டாப் சினிமா செய்திகள்!

சினிமா செய்திகள்

Published: 

28 Oct 2024 18:27 PM

இன்றைய சினிமா செய்திகள்: வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் முன்னணி நடிகர்களின் அமரன், ப்ரதர், லக்கி பாஸ்கர், ப்ளடி பெக்கர் படங்கள் முதல் நடிகை சினேகாவிற்கு மிகவும் பிடித்த நடிகர் யார் என்பது குறித்து வெளியான வரை அக்டோபர் மாதம் 28-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.

தீபாவளி ரேஸில் களமிறங்கும் 4 படங்கள்

தீபாவளி, பொங்கள் என பெரிய பண்டிகைகள் வரும் போது கோலிவுட் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். இந்த நிலையில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் ப்ரதர், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர், கவினின் ப்ளடி பெக்கர் என நான்கு முக்கிய நடிகர்களின் படங்கள் கோலிவுட்டில் வெளியாகவுள்ளது. அதில் வெல்லப்போவது யார் என்பது படத்தின் வெளியீட்டிற்கு பிறகே தெரியவரும்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எவிக்‌ஷன் நாமினேஷன் லிஸ்ட் இதோ!

கடந்த 6-ம் தேதி பிக்பாஸ் தமிழ் 8-வது சீசன் தொடங்கியது. இதில், ரவீந்தர் சந்திரசேகர், அன்ஷிதா, அருண் பிரசாத், தீபக், தர்ஷா குப்தா, தர்ஷிகா, ஜாக்குலின், ஜெப்ரி, முத்துக்குமார், அர்னவ், பவித்ரா ஜனனி, ரஞ்சித், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, செளந்தர்யா, சுனிதா, வி.ஜே. விஷால் என 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் அவர் நிகழ்ச்சியை விட்டு விலகிய பிறகு தற்போது விஜய் சேதுபதி இந்த 8-வது சீசனை தொகுத்து வழங்குகிறார். முதல் வார நாமினேஷனில் இடம் பிடித்த ரவீந்தர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது வார நாமினேஷனில் இடம் பிடித்த அர்னவ் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் இந்த வார நாமினேஷனில் ஜாக்குலின், சுனிதா, அன்சிதா, பவித்ரா, தீபக், ரஞ்சித், ஜெஃப்ரி, அருண், சத்யா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

நடிகை அதிதி ராவிற்கு இன்று பிறந்தநாள்

அதிதி ராவ் ஹைதாரி 28 அக்டோபர் 1986 அன்று ஹைதராபாத்தில் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை ஆந்திர மாநிலத்தில் முடித்தார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் பட்டம் பெற்றார். ஆறு வயதில், டெல்லியின் புகழ்பெற்ற லீலா சாம்சனிடம் பரதநாட்டியம் கற்கத் தொடங்கினார். தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதி இடம் பிடித்தார் அதிதி ராவ். அதனை தொடர்ந்து செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா படங்களிலும் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று நடிகை அதிதி ராவ் தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

’மெய்யழகன்’ படத்திலிருந்து ‘அருள் மெய்’ வீடியோ பாடல் இதோ

நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்தசாமி நடிப்பில் வெளியான ‘மெய்யழகன்’ படத்திலிருந்து ‘அருள் மெய்’ பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் பிரேம் குமார். இவர் அடுத்ததாக கார்த்தியின் 27-வது படத்தை இயக்கியுள்ளார். மெய்யழகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்தசாமி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இதில் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா மற்றும் தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படம் கடந்த மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் படத்திலிருந்து ‘அருள் மெய்’ பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.

எனக்கு இந்த நடிகரைதான் மிகவும் பிடிக்கும் – சினேகா

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சினேகா துபாயில் படித்து வளர்ந்தபின் அவருடைய குடும்பம் தமிழகத்துக்குக் குடிபெயர்ந்தது. ‘இங்கணே ஒரு நிலாபக்‌ஷி’ என்னும் மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். 2000-களின் ஆரம்பங்களில் சிம்ரன்,ரம்பா,ஜோதிகா என வடமாநில நடிகைகள் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த பொழுது தென்னிந்தியாவில் பிறந்து மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் தன் திறமையான நடிப்பினால் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை சினேகா. நடிகை சினேகா விஜய், அஜித், கமல், சூர்யா, பிரசாந்த், தனுஷ் என தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். மேலும், தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் அப்பா விஜக்கு ஜோடியாக நடித்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சினேகாவிடம் அவருக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அவருக்கு அஜித் தான் பிடிக்கும் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

போர் நினைவிடத்திற்கு சென்ற அமரன் படக்குழுவினர்

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் 21-வது படமாக அமைந்த இதை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு அமரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார். அவர் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் இது. இந்தப் படம் வருகின்ற 31-ம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது படத்தின் இயக்குநர் மற்றும் நடிகை சாய் பல்லவி டெல்லியில் உள்ள போர் நினைவிடத்திற்கு சென்று அங்கு உள்ள மேஜர் முகுந்த் மற்றும் சிப்பாய் விக்ரம் சிங் ஆகியோரின் நினைவிடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

7 முறை தற்கொலைக்கு முயன்ற இயக்குனர் செல்வராகவன்

தனுஷ் என்ற மாபெரும் கலைஞனை தமிழ் சினிமாவுக்கு உருவாக்கி தந்தவர் செல்வராகவன். இவர் தனது அற்புத படைப்புகளால் தனக்கென தனியொரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமான இவர், அந்த படத்தின் தான் தனுஷை ஹீரோவாக அறிமுகம் செய்தார். இந்த படத்தை இயக்கியதும் இவர்தான். இதன் பிறகு காதல் கொண்டேன்,  7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என தொடர்ந்து வித்யாசமான படங்களை இயக்கி ரசிகர்களின் பேராதரவைப் பிடித்தார் செல்வராகவன். தற்போது படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் உறவுகள் குறித்தும் அதனால் ஏற்படும் வலிகள் குறித்துக் செல்வராகவன் பேசி வருகிறார். அப்படி சமீபத்தில் தற்கொலை குறித்து பேசியுள்ளார். அதில் தானும் 7 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் பிரச்னைக்கு அது தீர்வு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மை ஒரு நாள் வெல்லும் – ஜானி மாஸ்டர்

போக்சோ வழக்கில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு ஜாமின் கிடைத்துள்ளது. 2019ல் இவருடன் பணிப்புரிந்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 21 வயது இளம்பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளதார். அதன்பேரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் தெலங்கானா போலீசார் டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது வழக்கு பதிந்துள்ளனர். ஹைதராபாத் ராய்துர்கம் காவல் நிலையத்தில் இவர் ஜானி மாஸ்டர் மீது புகாரளித்துள்ளார். சென்னை , மும்பை , ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு படப்பிடிப்பிற்கு சென்றபோது ஜானி மாஸ்டர் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஜானியை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. சமீபத்தில் தனது எக்ஸ் தள பக்கதில் குடும்பத்தினருடன் இருக்கும் வீடியோவை பதிவிட்ட ஜானி உண்மை ஒரு நாள் வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.

நடிகை சினேகாவிற்கு பிடித்த நடிகர் இவர்தான்!
மாஸ் ஹீரோதான் இந்தப் பையன்... யார் தெரியுதா?
தனிப்பட்ட வளர்ச்சிக்கு தேவையான முக்கிய விஷயங்கள்!
சகோதரியிடம் உடன்பிறப்புகள் கற்றுக்கொள்ளும் முக்கிய விஷயங்கள்!