Arvind Kejriwal Resignation: டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.. அடுத்தது என்ன?
மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை இன்று நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கினார். அதே சமயத்தில் ஆம் ஆத்மி சட்டசபை தலைவராக தேர்வான அதிஷி டெல்லியில் புதிய அரசு அமைக்க உரிமை கோரினார்.
மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை இன்று நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கினார். டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும், அவர் முதல்வர் அலுவலகத்திற்கு செல்ல கூடாது, எந்த கோப்புகளிலும் கையெழுத்திட கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனைகள் விதித்திருக்கிறது. இதையடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்த அரவிந்த் கெஜ்ரிவால், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதன்படி, இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதே சமயத்தில் ஆம் ஆத்மி சட்டசபை தலைவராக தேர்வான அதிஷி டெல்லியில் புதிய அரசு அமைக்க உரிமை கோரினார்.
AAP National convenor Arvind Kejriwal resigns as the Chief Minister of Delhi; tenders his resignation to Delhi LG Vinai Kumar Saxena.
Atishi to take over as next CM of Delhi. pic.twitter.com/hH6mpfegP6
— ANI (@ANI) September 17, 2024
டெல்லி முதல்வராக தேர்வு செய்யப்பட்ட அதிஷி கூறுகையில், “இன்று அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்துள்ளார். கட்சிக்கும் டெல்லி மக்களுக்கும் இது ஒரு உணர்ச்சிகரமான தருணம். அதே நேரத்தில்கெஜ்ரிவாலை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். தேர்தல் நடைபெறும் வரை நான் டெல்லியை பார்த்துக் கொள்வேன். எங்களுக்கு ஆட்சி அமைக்க உரிமை உண்டு” என்று தெரிவித்தார்.
Also Read: டெல்லியின் புதிய முதல்வர்.. யார் இந்த அதிஷி மெர்லினா.? அரசியலில் கடந்து வந்த பாதை என்ன?
மேலும் இதுகுறித்து ஆம் ஆத்மி தலைவர் கோபால் ராய் கூறுகையில், “அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை டெல்லி ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார். அனைத்து எம்எல்ஏக்களும் சேர்ந்து அதிஷியை புதிய முதல்வராக முன்னிறுத்த முடிவு செய்துள்ளனர். ஆட்சி அமைக்க அதிஷி உரிமை கோரியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதேவேளை டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26ஆம் தேதி சிபிஐ கைது செய்தது.
பல கட்ட விசாரணைக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் வெளியே வந்தார். டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் புதிய தலைமையகத்தில் முதல்வர் கெஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், கட்சியின் பிற மூத்த தலைவர்கள் இணைந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் நேற்று உரையாற்றினார். அப்போது டெல்லி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன் என்றும் மக்கள் எனக்கு நேர்மை சான்றிதழ் கொடுத்த பிறகு மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமருவேன் என்றார்.
இதற்கிடையில், புதிய முதலமைச்சர் தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த கூட்டத்தில் டெல்லியின் அடுத்த முதலமைச்சராக அதிஷி மெர்லினா பெயரை முன்மொழிந்தார் கெஜ்ரிவால். கெஜ்ரிவால் முன்மொழிந்ததை தொடர்ந்து அனைத்து எம்.எல்.ஏ-க்களும் ஒப்புதல் அளித்த நிலையில் டெல்லியின் அடுத்த முதலமைச்சராக அதிஷி மெர்லினா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவர் விரைவில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாள்.. தலைவர்கள் வாழ்த்து!
இப்படியான சூழலில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்த அதே வேளையில் அதிஷி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதன் மூலம் டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சராக அதிஷி பதவியேற்க உள்ளார். மேலும், மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜியைத் தொடர்ந்து இந்தியாவின் ஒரு மாநிலத்தை வழிநடத்தும் இரண்டாவது பெண் முதல்வரும் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.