NITI Aayog: ”மைக் ஆஃப்.. 5 நிமிடம் கூட பேச விடவில்லை” நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து கோபமாக வெளியேறிய மம்தா!
Mamata Banerjee: நிதி அயோக் கூட்டத்தில் இருந்து வெளியேறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், "நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து வெளியே வந்துள்ளேன். சந்திரபாபு நாயுடுவுக்கு பேச 20 நிமிடம் வழங்கப்பட்டது. அசாம், கோவா, சத்தீஸ்கர் முதல்வர்கள் 10 முதல் 12 நிமிடங்கள் வரை பேசினார்கள். எனக்கு 5 நிமிடம் கூட பேச வாய்ப்பு அளிக்கவில்லை. இது அநியாயம்" என்று தெரிவித்துள்ளார்.
வெளியேறிய மம்தா: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய மாநில அரசுகள் இடையிலான நிர்வாக ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு அரசு விநியோக வழிமுறைகளை வலுப்படுத்தி கிராமப்புற, நகர்ப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே இந்த கூட்டத்தின் நோக்கமாகும். இந்த கூட்டத்தை தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஹிமாச்சல பிரசேதம், கர்நாடக ஆகிய மாநில முதலமைச்சர்கள் புறக்கணித்துள்ளன. அதாவது, பட்ஜெட்டில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கியதால் முதல்வர்கள் ஸ்டாலின், சித்தராமையா, ரேவந்த் ரெட்டி, பகவந்த் மான், சுக்விந்தர் சிங் ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலமான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். இதில் மம்தாவுக்கு பேச அனுமதி வழங்கப்படாததால் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
”5 நிமிடம் கூட பேச அனுமதிக்கவில்லை”
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ” நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து வெளியே வந்துள்ளேன். சந்திரபாபு நாயுடுவுக்கு பேச 20 நிமிடம் வழங்கப்பட்டது. அசாம், கோவா, சத்தீஸ்கர் முதல்வர்கள் 10 முதல் 12 நிமிடங்கள் வரை பேசினார்கள். எனக்கு 5 நிமிடங்கள் பேச அனுமதிக்கவில்லை. இது அநியாயம். எதிர்க்கட்சி தரப்பில் இருந்து நான் மட்டுமே இங்கே பிரதிநிதியாக இருந்தேன். இருந்தும் என்னை பேச அனுமதிக்கவில்லை. நான் பேசிக்கொண்டிருந்தபோதே எனது மைக்கை ஆஃப் செய்துவிட்டனர்.
ஏன் என்னை தடுத்தீர்கள் ஏன பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்று கேட்டேன். இந்த கூட்டத்தில் நான் பங்கேற்றதற்காக நீங்கள் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் உங்கள் கட்சிக்கும், உங்கள் அரசாங்கத்திற்குமே அதிக வாய்ப்புகளை தருகிறீர்கள். நீங்கள் இப்படி செய்தது வங்கத்தை மட்டுமல்ல அவமதிக்கவில்லை. அனைத்து எதிர்க்கட்சிகளையும் அவமதிக்கும் செயலாகும்” என்றார்.
VIDEO | “I have come out boycotting the meeting. Chandrababu Naidu was given 20 minutes to speak, CMs of Assam, Goa, Chhattisgarh spoke for 10-12 minutes. I was stopped from speaking after just five minutes. This is unfair. From the opposition side, only I am representing here,… pic.twitter.com/ur9hN1RsUA
— Press Trust of India (@PTI_News) July 27, 2024
மேலும் பேசிய அவர், “நிதி ஆயோக்கை ரத்து செய்து , திட்டக் கமிஷனை மீட்டெடுக்க வேண்டும். நிதி ஆயோக்கிற்கு நிதி அதிகாரம் இல்லை. அது எப்படி வேலை செய்யும்? அதற்கு நிதி அதிகாரம் கொடுங்கள் அல்லது திட்டக் கமிஷனை மீண்டும் கொண்டு வாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: ”ஒரு மாநில முதல்வரை இப்படியா நடத்துவது?” மம்தாவுக்கு ஆதரவாக பேசிய ஸ்டாலின்!