5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

16th BRICS Summit: பிரிக்ஸ் உச்சி மாநாடு.. ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி.. முக்கியத்துவம் என்ன?

பிரிக்ஸ் உச்சி மாநாடு: பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்ச மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு 2 நாள் பயணமாக இன்று புறப்பட்டார். இந்த ஆண்டில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ரஷ்யா பயணம் மேற்கொள்கிறார்.

16th BRICS Summit: பிரிக்ஸ் உச்சி மாநாடு.. ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி.. முக்கியத்துவம் என்ன?
பிரதமர் மோடி (image credit: PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 22 Oct 2024 08:48 AM

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்ச மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு 2 நாள் பயணமாக இன்று புறப்பட்டார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 7 மணிக்கு பிரதமர் மோடி சென்றார். இந்த ஆண்டில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ரஷ்யா பயணம் மேற்கொள்கிறார். கடந்த ஜூலை மாதம் மாஸ்கோவில் நடந்த 22வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த பயணத்தின் போது, ​​அவர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இது மட்டுமல்லாமல், ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலரும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி

இந்த நிலையில், இன்று பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டார்.  பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்ச மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா புறப்பட்டார். பிரதமர் மோடி மதியம் 12.55 மணிக்கு ரஷ்யாவின் கசான் நகரை சென்றடைகிறார். இதைத் தொடர்ந்து, மதியம் 1:35 மணிக்கு ஹோட்டலுக்குச் செல்லும் அவர், அங்கு இந்திய மக்களை சந்திப்பார்.

இதனை அடுத்து, பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து, மாலை 3:30 முதல் 4:30 மணி வரை பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். இதைத் தொடர்ந்து, இரவு 9.30 மணிக்கு கசான் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

Also Read: இந்தியா சீனா எல்லை பிரச்சனை – முக்கிய தகவல் சொன்ன வெளியுறவு துறை செயலாளர்

இந்த மாநாட்டின் கருப்பொருள் ‘உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத் வலுப்படுத்துதல்’ என்பதாகும். இந்த மாநாட்டில் பிரேஸில், ரஷ்யா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.


மேலும், மாநாட்டில், அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கிறார்.  இவருடன் சீன அதிபர் ஷி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் ரஜாவி, உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். ரஷ்யா-உக்ரைன் போர் , இஸ்ரேல், ஈரான், லெபான் என மத்திய கிழக்கு போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது.

முக்கியத்துவம் என்ன?

பிரதமர் மோடியின் ரஷ்யா பயணம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், “உலகளாவிய வளர்ச்சி, பொருளாதாரம், நிலையான வளர்ச்சி, உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்கள் போன்ற பகுதிகளில் கூட்டமைப்பின் முயற்சிகளை வழிநடத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.

பிரிக்ஸ் நாடுகளுக்குள் இருக்கும் நெருக்கமான ஒத்துழைப்பை இந்தியா மதிக்கிறது. உலகளாவிய சவால்களை தீர்ப்பதற்கான முக்கிய சர்வதேச தளமாக திகழும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் நமது ஈடுபாடு மற்றும் செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

ரஷ்ய பயணமானது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

Also Read: காஷ்மீரில் மீண்டும் அட்டகாசம்.. தீவிரவாதிகள் தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

நீண்ட காலமாக நடந்து வரும் உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி வலியுறுத்துவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மற்ற பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் வாய்ப்புள்ளது.

 

Latest News