Uttarpradesh: திருப்பதி லட்டு சர்ச்சை.. உ.பி., கோயில்களில் பிரசாதங்களுக்கு கடும் கட்டுப்பாடு..!
திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று கலக்கப்பட்டு இருக்கலாம் என ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு தான் காரணம் எனவும் விமர்சித்தது. இந்த தகவல் பக்தர்கள் மத்தியில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
உத்தரப்பிரதேசம்: திருப்பதி கோவில் லட்டுவில் கலப்படம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பல கோவில்களில் பக்தர்கள் இனிப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருள்களை காணிக்கையாக செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பக்தர்கள் இனிப்புகளுக்கு பதிலாக தேங்காய், உலர் பழங்கள், ஏலக்காய், பழங்கள் போன்ற பொருட்களை காணிக்கையாக வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் வெளியில் இருந்து கொண்டு வரப்படும் பிரசாத வகைகளுக்கும் கோயில்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் செயல்படும் பிற கோயில்களில் பிரசாதங்கள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் தொடர்பாக தவறான தகவல்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: Watch Video: அனைத்து விதமான கிரிக்கெட்டில் ஓய்வு.. சக வீரர் அளித்த கௌரவத்துடன் அழுதுகொண்ட வெளியேறிய பிராவோ!
இதனிடையே அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி கோயிலில் தலைமை அர்ச்சகராக உள்ள சத்தியேந்திரதாஸ், வெளி இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் பிரசாதங்களுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் . இதேபோல் மதுராவில் செயல்படும் தர்மா பிரகாஷ் ரக்ஷா சங்கம் பழங்கள் உள்ளிட்ட இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட பழங்கால பிரசாதம் வழங்கும் நடைமுறையை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில் வளாகத்தில் சுத்தமான இனிப்புகளை விற்கும் கடைகளை திறக்கவும் உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோயில்கள் வழியே விற்பனை செய்யப்படும் இனிப்புகளின் தரத்தை பரிசோதிக்க மாவட்ட ஆட்சியருக்கு மங்காம்மேஸ்வரர் கோயில் மஹந்த் ஸ்ரீ தரானந்த் பிரம்மச்சாரி மகராஜ் கடிதம் எழுதியுள்ளார். அதன் தூய்மையை சரி செய்யும் வரை ஹலோ பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:Gold Price September 27 2024: ரூ.57 ஆயிரத்தை நெருங்கும் சவரன் .. இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ!
திருப்பதி லட்டு விவகாரம்
உலக அளவில் இரண்டாவது பணக்கார கடவுளாக அங்கீகரிக்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வருகை தருவது வழக்கம். இந்த கோயில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. திருப்பதி லட்டுவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் லட்டு தேவைப்படுபவர்களுக்கு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இப்படியான நிலையில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திராவில் ஆட்சியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி கடந்த வாரம் திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டது. அதன்படி திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று கலக்கப்பட்டு இருக்கலாம் என ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு தான் காரணம் எனவும் விமர்சித்தது. இந்த தகவல் பக்தர்கள் மத்தியில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி, இது அரசியல் பழிவாங்கும் செயல் என தெரிவித்துள்ளார். மேலும் திருப்பதி லட்டு தயாரிக்க ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் நெய் விநியோகித்த திண்டுக்கல்லை சேர்ந்த தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்ட குற்றச்சாட்டை அந்நிறுவனம் மறுத்துள்ளது. இதனிடையே திருப்பதியில் ஏற்பட்ட தோஷம் நீங்க பல்வேறு யாகங்கள், பரிகாரங்கள் செய்யப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டது. இனிமேல் இதுபோன்று தவறுகள் நடைபெறாது எனவும் ஆந்திர அரசு உறுதி அளித்துள்ளது. இத்தனை சர்ச்சைகளுக்கும் மத்தியில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. லட்டு சர்ச்சை கிளம்பிய அந்த வாரத்தில் மட்டும் கிட்டதட்ட 10 லட்சம் லட்டுகள் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.