5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tirupati: திருப்பதியில் தங்க கொடிமரம் சேதமா? – உண்மை என்ன தெரியுமா?

திருப்பதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துக்கான கயிறை கொடிமரத்தின் உச்சியில் பொருத்தும் பணி இன்று காலை நடைபெற்றது. அப்போது பணியின்போது கொடிமரத்தின் மேல் பொருத்தப்பட்டிருந்த வளையம் உடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த திருக்கோயில் நிர்வாகத்தினர் சேதமடைந்த வளையத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

Tirupati: திருப்பதியில் தங்க கொடிமரம் சேதமா? – உண்மை என்ன தெரியுமா?
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 04 Oct 2024 19:39 PM

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்றம் இன்று மாலை கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில் பக்தர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதாவது திருப்பதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துக்கான கயிறை கொடிமரத்தின் உச்சியில் பொருத்தும் பணி இன்று காலை நடைபெற்றது. அப்போது பணியின்போது கொடிமரத்தின் மேல் பொருத்தப்பட்டிருந்த வளையம் உடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த திருக்கோயில் நிர்வாகத்தினர் சேதமடைந்த வளையத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் கொடிமரத்தின் வளையம் உடைந்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை என திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

Also Read: Travel Tips: அக்டோபரில் சுற்றுலா செல்ல திட்டமா..? மலையேற்றம் செய்ய சிறந்த இடங்கள் இதோ!  

 

அதில், புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தின் முதல் நாளே கருடன் கொடியின் கொக்கி உடைந்ததாக வதந்தி பரவியது. இது தவறான தகவலாகும். இந்த ஆதாரமற்ற கூற்றுகளை நம்ப வேண்டாம் என்று பக்தர்களை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழுவதுமாக பிரம்மோற்சவத்துக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அவை நீக்கப்பட்டு புதுப்பிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உலகமெங்கும் உள்ள பக்தர்கள் ஆண்டுதோறும் வருகை தருவது வழக்கம். இதனால் தினசரி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இலவச தரிசனம், ரூ. 300 சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம் என பல வகைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதேசமயம் நடைபயணம் மேற்கொண்டு வரும் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக சிறிய அளவிலான லட்டு கோயில் வளாகத்தில் வழங்கப்படும். அதே சமயம் மேற்கொண்டு லட்டு தேவைப்படுபவர்களுக்கு தனியாக வழங்குவதற்காக லட்டு கவுண்டர்களும் செயல்பட்டு வருகின்றது. இங்கு ஒரு லட்டு ரூ. 50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இப்படியான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பிரம்மோற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. அக்டோபர் 4 ஆம் தேதி ஆன இன்று தொடங்கி அக்டோபர் 12ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் இரவு மலையப்பசாமி பல்வேறு வாகனங்களில் மாடவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு புரட்டாசி மாதத்தில் வருகை தருவார்கள். இதனை முன்னிட்டு கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது. அப்போது கோவிலின் தங்க கொடிமரம், கருவறையான ஆனந்த நிலையத்தின் தங்க விமானம் ஆகியவையும் சுத்தம் செய்யப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டது.

Also Read: PM Internship scheme: ரூ.60 ஆயிரம் ஊக்கத்தொகை.. PM இன்டர்ன்ஷிப் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?

 

மாலையில் பிரம்மோற்சவத்திற்கான கொடி ஏற்றப்பட்டுள்ள நிலையில், ஆந்திர முதலமைச்சர் சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரவுள்ளார். இப்படியான நிலையில் கொடிமரத்தின் வளையம் உடைந்ததாக தகவல் வெளியானது. இதனால் பக்தர்கள் இடையே பெரும் குழப்பமும் ஏற்பட்டது.

அதாவது பிரம்மோற்சவ விழாவிற்கான கொடியேற்றத்துக்கான கயிறு பொருத்தமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும்,  உடைந்து விழுந்த வளையத்தை மீண்டும் பொறுத்தும் பணிகளில் தேவஸ்தான ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இவையெல்லாம் உண்மையில்லை என தேவஸ்தான நிர்வாகம் மறுத்துள்ளதால் பக்தர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மைய மண்டபத்தில் தங்க கொடிமரம் இருக்கும் நிலையில் இது 15 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிரம்மோற்சவ காலங்களில் கருடனின் உருவம் பதிக்கப்பட்ட மிகப்பிரமாண்டமான கொடி கொடிமரத்தில் ஏற்றப்படுவது வழக்கம். பிரம்மோற்சவ விழாவில் கலந்து கொள்ள தேவர்கள், அனைத்து கடவுள்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் நோக்கத்தில் இந்த கொடி ஏற்ற நிகழ்வு நடைபெறும். கடந்த 2021 ஆம் ஆண்டு திருப்பதியில் பெய்த கன மழை மற்றும் புயல் காரணமாக தங்க கொடிமரம் சேதமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest News