மோடியை புகழ்ந்த மனைவி.. கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய கணவன்.. விவாகரத்து செய்து அதிர்ச்சி!
உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்து பேசிய மனைவி மீது கொதிக்கும் சாம்பரை ஊற்றியதோடு, முத்தலாக் கொடுத்து அவரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் கணவன் அர்ஷத், மாமியார் ரைஷா, மாமனார் இஸ்லாம், உறவினர் குல்சும் உள்பட 8 பேர் மீதுபோலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
மோடியை புகழ்ந்த மனைவி: உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்து பேசிய மனைவி மீது கொதிக்கும் சாம்பரை ஊற்றியதோடு, முத்தலாக் கொடுத்து அவரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்து செய்த அந்த நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியைச் சேர்ந்தவர் மரியம். இவர் அயோத்தியைச் சேர்ந்த அர்ஷத் என்பவரை 2023ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மரியம் தனது கணவனின் சொந்த ஊரான அயோத்தியில் வசித்து வந்துள்ளார். அயோத்தி நகரின் வளர்ச்சி, அங்குள்ள சாலைகள், அந்த நகரின் அழகு என மரியத்துக்கு அயோத்தியை பிடித்திருந்தது. இதனால் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும், பிரதமர் மோடியையும் தனது கணவர் அர்ஷத் முன்பு புகழ்ந்து பேசினார்.
Also Read: மோசமான ஒருதலைக் காதல்.. இளம்பெண் கொடூர கொலை.. கட்டிடத்திற்குள் உடல் புதைப்பு.. பகீர் பின்னணி!
இதனால் கோபமடைந்த கணவன் அர்ஷம் கொதிக்கும் சாம்பரை அவர் மீது ஊற்றி, விவாகரத்து செய்துள்ளார். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்தின் பாதிக்கப்பட்ட பெண் மரியா கூறுகையில், “கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பம் 13ஆம் தேதி அயோத்தி கோட்வாலி நகரில் உள்ள மெஹல்லா டெல்லி தர்வாசாவில் வசிக்கும் இஸ்லாமியரான அர்ஷத் என்பவரை நான் திருமணம் செய்து கொண்டேன்.
விவாகரத்து செய்த கணவன்:
இரு வீட்டாரின் சம்மதத்தோடும், தன் சக்திக்கு மீறி என் தந்தை எனக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பிறகு ஒரு நாள் ஊருக்கு வெளியே சென்றபோது அயோத்தி சாலைகள், அழகுபடுத்திய விதம், வளர்ச்சி, அங்குள்ள சூழல் எனக்கு பிடித்திருந்து. இதுகுறித்து முதல்வர் யோகி மற்றும் பிரதமர் மோடியை என் கணவன் முன்பு பாராட்டினேன். இதனால் என்னை என் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். சூடாக இருக்கும் சாம்பாரை என் மீது ஊற்றினார்” என்றார்.
இதுகுறித்து பேசிய காவல் அதிகாரி பிரிஜ்ராஜ் பிரசாத், “சிறிது நாள் கழித்து உறவினர்கள் தலையீட்டு பிரச்னையை தீர்த்து வைத்தனர். பின், அந்த பெண் தனது கணவனுடன் வாழ அயோத்தி திரும்பினார். அப்போது, முதல்வர், பிரதமர் ஆகியோரை திட்டி, தலாக், தலாக், தலாக் என்று கூறி அந்த பெண்ணை விவாகரத்து செய்தார். விவாகரத்து கொடுத்த அதே நாள், அந்த பெண்ணை அவரது கணவன் அடித்திருக்கிறார்” என்றார்.
இதில் புகாரின் அடிப்படையில் பெண்ணின் கணவன் அர்ஷத், மாமியார் ரைஷா, மாமனார் இஸ்லாம், உறவினர் குல்சும் உள்பட 8 பேர் மீது வரதட்சணை தடுப்பு சட்டம் மற்றும் இஸ்லாமிய பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.