Ration Shop Jobs: தேர்வே கிடையாது.. உள்ளூரிலே அரசு வேலை.. ரூ.30,000 வரை சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க! - Tamil News | tamilnadu cooperative societies recruitment 2024 for salesman and packers jobs check the eligibility and other details tamil | TV9 Tamil

Ration Shop Jobs: தேர்வே கிடையாது.. உள்ளூரிலே அரசு வேலை.. ரூ.30,000 வரை சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

ரேஷன் கடைகள்: ரேசன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நியாய விலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (salesman), கட்டுநர்கள் (packers) பதிவுகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம்.

Ration Shop Jobs: தேர்வே கிடையாது.. உள்ளூரிலே அரசு வேலை.. ரூ.30,000 வரை சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

ரேஷன் கடைகளில் வேலை

Updated On: 

10 Oct 2024 12:38 PM

கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு சங்கங்களில் ரேசன் கடைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரிசி, பருப்பு, கோதுமை எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த ரேசன் அட்டைதாரர்களுக்கு மாநில முழுவதும் 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் அட்டை திட்டம் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் அவ்வப்போது ரேஷன் கட்டைகளில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், தற்போது ரேசன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம்.

பணி விவரம்:

சென்னை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (salesman), கட்டுநர்கள் (packers) பதிவுகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, நியாய விலைக்கடை விற்பனை பணிக்கு திருவல்லிகேணி நகர கூட்டுறவுச் சங்கத்தில் 9 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மேலும், நியாய விலைக்கடை கட்டுநர் பணிக்கு 348 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தில் 88 பணியிடங்களும், பூங்கா நகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் 42 பணியிடங்களும், வட சென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் 51 பணியிடங்களும், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையில் 95 பணியிடங்களும், பிரதம கூட்டுறவு பண்டகசாலையில் 39 பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன.

Also Read: சூப்பர் அறிவிப்பு.. 2வது முறையாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் அதிகரிப்பு!

கல்வித்தகுதி:

நியாய விலைக் கடையில் விற்பனையாளர் பணிக்கு 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நியாய விலைக் கடையில் கட்டுநர் பணிக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இரண்டு பணிகளுக்கும் தமிழ் மொழியில் பேசவும், எழுதப் படிக்கவும் போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.07.2024-அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், அருந்ததியிர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இஸ்லாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம்பு இல்லை. இதர வகுப்பினருக்கு (OC) 32 வயது வரை இருக்க வேண்டும். அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை. இதர வகுப்பினைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு 50 வயது வரை இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

சம்பளம்:

நியாய விலைக் கடையில் விற்பனையாளர் பணிக்கு தொகுப்பு ஊதியமாக நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை ரூ.6,250 வழங்கப்படும், ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.8,600 முதல் 29,000 வரை வழங்கப்படும். எனவும், நியாய விலைக் கடையில் கட்டுநர் பணிக்கு தொகுப்பு ஊதியமாக நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை ரூ.5,500 வழங்கப்படும். ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.7,800 முதல் 26,000 வரை வழங்கப்படும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை;

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், விண்ணப்பதாரர் சார்ந்துள்ள வகுப்பு வாரியான இனச்சூழற்சி அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்விற்கு கட்டாயமாக நேரில் வருகை புரிய வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு வருகை புரியாத விண்ணப்பதாரர்கள் மேற்படி பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பணிகளுக்கு https://drbchn.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது. அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் புகைப்படம், கையெழுத்து, சாதிச் சான்றிதழ், கல்வித்தகுதிக்கான சான்றிதழ், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் எனில் அதற்கான சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். இதையெல்லாம் சமர்ப்பித்து, விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: டிகிரி முடித்தவரா? ரூ.1.60 லட்சம் சம்பளம்.. சென்னை மெட்ரோவில் சூப்பரான வேலை.. உடனே பாருங்க!

விண்ணப்ப கட்டணம்:

விற்பனை பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.150, கட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.100 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் விலக்களிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் சமூக நலத்துறை அலுவலகரிடம் இருந்து சான்றிதழும், மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முக்கிய நாட்களும் நேரமும்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 07.11.2024 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட் இதோ!
ஹேப்பி பர்த்டே அக்‌ஷரா ஹாசன்...
பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்னேகா...!
மன அழுத்தம் குறைய இதை செய்யுங்கள்!
Exit mobile version