5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tirupathi: திருப்பதியும் ’ஏழு’ எண்ணிக்கையும்.. பெருமையான 7 விஷயங்கள்.. என்னென்ன தெரியுமா?

Pride of Tirupathi: திருப்பதி ஆந்திராவின் ஆன்மீக அடையாளமாக திகழ்கிறது. இந்த ஆலயம் எப்பொழுது கட்டப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும் உலகிலேயே பழமையும் பெருமையும் வாய்ந்த பாறை மலைகளில் இரண்டாம் இடம் வகிக்கும் மலைகள் திருமலை மலைகள் தான். உலகப் புகழ் பெற்ற திருப்பதி கோயிலுக்கு 7 விசயங்கள் பெருமைகள் சேர்க்கின்றன.

Tirupathi: திருப்பதியும் ’ஏழு’ எண்ணிக்கையும்.. பெருமையான 7 விஷயங்கள்.. என்னென்ன தெரியுமா?
திருப்பதி மலை (Photo credit: Pinterest)
Follow Us
mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 04 Oct 2024 09:29 AM

திருப்பதி பெருமாள் ஆலயத்தின் பெருமைகள்‌ ஏராளம். இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் ஏராளம். பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளும் ஏராளம். எனவே உலகில் பணக்கார கடவுள் திருப்பதி வெங்கடாசலபதி என்பதில் எந்த ஐயமும் இல்லை. 9 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம் இது. வெங்கடேச பெருமாள் கோயில் கொண்ட இடம் திருமலை என்றும் அவருடைய தேவையான பத்மாவதி தாயார் குடிகொண்டுள்ள அடிவாரம் திருப்பதி என்றும் வழங்கப்பட்டாலும், பெருமாள் குடி கொண்ட இடம் மேல் திருப்பதி எனவும் தாயார் குடி கொண்ட இடம் கீழ் திருப்பதி என்றும் அழைக்கப்படுவதே வழக்கமாக இருக்கிறது. இந்த திருப்பதிக்கு பெருமை சேர்க்கும் ஏழு விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஏழு நாமங்கள்:

அனைத்தையும் கடந்த நிலையில் பெயரற்ற பரம்பொருளாக அருளும் இறைவன், தன் அடியார்களால் பல்வேறு நாமங்களைக் கொண்டும் அழைக்கப்படுகிறார். அதன்படி திருமலையில் இருந்து ஆட்சி செய்யும் திருமலை வாசனுக்கும் முக்கியமான ஏழு பெயர்கள் உள்ளன. ஏழுமலையான், திருவேங்கடமுடையான், திருவேங்கடநாதன், வெங்கடேசன், வெங்கடேஸ்வரன், சீனிவாசன், மற்றும் பாலாஜி ஆகியவை ஆகும்.

ஏழு கலச ராஜகோபுரங்கள்:

திருமால் சன்னதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ராஜ கோபுரத்திற்கு சப்த லோகம் எனப்படும் ஏழு உலோகங்களுடன் தொடர்பு கொள்வது போல் ஏழு கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏழு தீர்த்தங்கள்:

திருப்பதியில் முக்கியத்துவம் பெற்ற 108 திருத்தங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவற்றில் குறிப்பிடத்தஏழு பெருமைக்குரிய ஏழு திருத்தங்கள் குறிப்பிட்டு சொல்லப்படுகின்றன. குமார தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராம கிருஷ்ண தீர்த்தம், ஆகாச கங்கை, பாண்டு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், சுவாமி புஷ்கரணி தீர்த்தம் ஆகியவை தான் அந்த ஏழு தீர்த்தங்கள்.

Also Read: Today Panchangam October 2 2024: இன்று மஹாளய அமாவாசை.. நல்ல நேரம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் இதோ!

ஏழு முக்கிய இடங்கள்:

பெருமாள் குடி கொண்டிருக்கும் திருமலை முழுவதும் முக்கியமாக இருந்தாலும் அங்கு ஏழு இடங்கள் முக்கியமாக சொல்லப்படுகிறது. கோவிந்தராஜர் சன்னதி, பூவராக சுவாமி சன்னதி, திருச்சானூர் கோவில், ஸ்ரீ பேடி ஆஞ்சநேயர் கோயில், ஸ்ரீ வாரி சிகர தரிசனம், சிலாதோரண பாறைகள், ஸ்ரீவாரி பாதாள மண்டப கோயில் ஆகியவை திருப்பதியில் நாம் அவசியம் தரிசிக்க வேண்டிய இடங்களாக விளங்குகிறது.

திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறைகள் உள்ளது உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளது.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம் எனவும் ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை எனவும் நம்பப்படுகிறது.

ஏழு தலை ஆதிசேஷன்:

ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனது ஏழு தலைகள் தான், ஏழுமலைகளாக விளங்கி வருவதாக ஐதீகம். திருப்பதி பிரமோற்சவத்தின் முதல் நாளில் கொடியேற்றத்திற்குப் பிறகு வேங்கடவன் பெரிய சேஷ வாகனம் என்ற ஏழு தலை நாக வாகனத்தில் திருவீதி உலா வருவது வழக்கம்.

ஏழு மகிமைகள்:

திருமலை வாசலின் பெருமைக்கு அணிகலனாக ஏழு மகிமைகள் உள்ளன. அவை சீனி வாச மகிமை, சேத்திர மகிமை, தீர்த்த மகிமை, பக்தர்கள் மகிமை, கோவிந்த நாமத்தின் மகிமை, பகுளா‌ தேவியின் மகிமை, பத்மாவதியின் மகிவை என ஏழு மகிமைகள் ஆகும்.

ஏழு மலைகள்:

திருவேங்கடம் கோயில் கொண்டுள்ள சப்தகிரி எனப்படும் ஏழு மலைகளின் பெயர்கள், கருடாத்ரி (சாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்தில் இருந்து மலையை எடுத்து வந்ததால் இப்பெயர் பெற்றது), வருஷபாத்ரி (விருசபன் என்ற அரக்கன் இறைவனை வணங்கி மோட்சம் பெற்றதால் இப்பெயர் ஏற்பட்டது), அஞ்சனாத்ரி (ஆஞ்சநேயரின் தாய் தனது குழந்தை பாக்கியம் வேண்டி தவமிருந்து குழந்தை பெற்றதால் இந்த மலை இந்த பெயர் பெற்றது), நீலாத்ரி (வேதங்கள் அனைத்தும் மலை வடிவில் பெருமாளை பூஜித்ததால் இப்பெயர் பெற்றது), சேஷாத்ரி (பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்ததால் இம்மலை இந்த இப்பெயர் பெற்றது), வேங்கடாத்ரி (பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு இப்பெயர் பெற்றது), நாராயணாத்ரீ ஆகியவை ஆகும்

Also Read: Thanjavur: கொலுசு அணிவித்தால் குழந்தை வரம் அருளும் காளிகா பரமேஸ்வரி!

Latest News