5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Hrudayaaleeswarar Temple: இதய நோய்களை தீர்க்கும் இருதயாலீஸ்வரர் கோயில்!

Aadi Masam: பூசலாரின் இதயத்தில் எழுந்தருளியதால் இருதயாலீஸ்வரன் சிவபெருமான் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் மகாசிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கார்த்திகை, சித்திரை முதல் நாள்,தைப்பூசம், பங்குனி உத்திரம், மகாசங்கராந்தி, வைகாசி விசாகம், பௌர்ணமி, அமாவாசை, பிரதோசம், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்கள் மிகவும் விசேஷமானதாகும்.

Hrudayaaleeswarar Temple: இதய நோய்களை தீர்க்கும் இருதயாலீஸ்வரர் கோயில்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 24 Jul 2024 15:59 PM

இருதயாலீஸ்வரர் கோயில்: நமக்கு ஏதாவது நோய் என்றால் உடனடியாக மருத்துவரை பார்க்கிறமோ இல்லையோ, கடவுளிடம் எல்லாம் சரியாக வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம். அப்படிப்பட்ட நம்பிக்கைக்கு பாத்தியப்பட்ட வழிபாட்டு தலங்கள் நம்மை சுற்றி ஏராளமாக இருந்தாலும் பெரும்பாலும் ஒவ்வொரு கோயிலும் எதற்கு சிறப்பானது என்பது பலருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட நிலையில் இருதய நோய் உள்ளவர்களுக்குப் பரிகாரத் தலமாக விளங்கும் இருதயாலீஸ்வரர் கோயில் பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம். இந்த கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அப்படிப்பட்ட இருதயாலீஸ்வரர் கோயில் சிறப்புகளை நாம் காணலாம்.

Also Read: Anthili Narasimhar: தீராத கடன் பிரச்னைகளை தீர்க்கும் அந்திலி நரசிம்மர்!

இந்த கோயில் எங்குள்ளது?

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள திருநின்றவூர் எனும் ஊரில் தான் பக்தர்களுக்கு இருதயாலீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். மூலவராக இவர் இருக்க உடன் அம்பாளாக மரகதாம்பிகை காட்சிக்கொடுக்கிறார். இந்த கோயிலின் கருவறையின் மேற்கூரையில் நான்கு பிரிவுகளுடன் இதய வடிவம் செதுக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும்.

கோயிலின் வரலாறு

 

சிவன் பக்தர் ஒருவர் முன்னொரு காலத்தில் உடல் முழுவதும் திருநீறைத் தொடர்ந்து பூசி தனது பக்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவரை பூசலார் என மக்கள் அழைத்து வந்த நிலையில், சிவனுக்கு கோயில் அமைக்க வேண்டும் என்ற ஆசை அந்த சிவபக்தருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது கற்பனையின்படி மனதில் சிவனுக்கு கோயில் கட்ட தொடங்கினார். இதனைத் தொடர்ந்து ஆகம விதிகளை கடைபிடித்து சிலைகளை உருவாக்கினார். எண்ணத்தில் என்ன தோன்றியதோ அதுவே கோயிலாக எழுந்தது. இதயத்திலே கோயில் கட்டுவது பற்றி இரவு பகலாக சிந்தித்து பூசலார் சிவபெருமானை கும்பாபிஷேக நாள் குறித்து குடியேறுமாறு மனமுருகி வேண்டினார்.

அந்நேரம் மன்னன் ராஜசிம்ம பல்லவன் காஞ்சியில் சிவபெருமானுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்தான். நகரமே விழாக்கோலம் பூண்ட நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் ராஜசிம்ம பல்லவன் கனவில் தோன்றிய சிவபெருமான், பூசலார் கட்டிய திருநின்றவூர் கோயிலில் தான் எழுந்தருள உள்ளதாகவும், வேறொரு நாளில் நீ கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கூறினார். திடுக்கிட்டு எழுந்த பல்லவ மன்னன் தன்னுடைய கோயிலை விட பூசலார் கோயில் எந்த வகையில் சிறப்பு வாய்ந்தது என்பதை அறிய விரும்பினான்.

மந்திரிகல் புடைசூழ திருநின்றவூர் வந்த ராஜசிம்ம பல்லவனுக்கு அவ்வூர் எவ்வித விழா கோலமும் இல்லாமல் அமைதியாக இருப்பது பற்றி ஆச்சரியமானது. பின்னர் மக்களிடம் பூசலார் கோயில் பற்றி கேட்க, அப்படி எதுவும் இல்லை என கூறி மன்னனை அழைத்து சென்றனர். அங்கு கண்மூடி அமர்ந்திருந்த பூசலாரின் இதயப் பகுதியில் சிவபெருமான் குடியேறியதற்கான தெய்வீக ஒளி வீசியது. மனதளவில் அனைத்து சடங்குகளும் நடந்ததை கண்டு ஆச்சரியப்பட்டார். சிவபெருமான் கைலாசநாதராக காட்சியளித்ததை மன்னனும், மக்களும் கண்டு மெய் சிலிர்த்தனர். இதனைத் தொடர்ந்து பல்லவ மன்னன் அதே கோயிலை அவ்வூரில் கட்டினான்.

Also Read: Aadi Month Special: வேண்டுதலை நிறைவேற்றும் இருக்கன்குடி மாரியம்மன் கோயில்!

என்ன ஸ்பெஷல்?

 

பூசலாரின் இதயத்தில் எழுந்தருளியதால் இருதயாலீஸ்வரன் சிவபெருமான் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் மகாசிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கார்த்திகை, சித்திரை முதல் நாள்,தைப்பூசம், பங்குனி உத்திரம், மகாசங்கராந்தி, வைகாசி விசாகம், பௌர்ணமி, அமாவாசை, பிரதோசம், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்கள் மிகவும் விசேஷமானதாகும். இறைவனை உருவாக்கிய பூசலாருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி, நடராஜர், நந்தி தேவர், சண்டிகேஸ்வரர் சன்னதிகளும் இங்குள்ளது.

இருதய நோய் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் மட்டுமின்றி, அனைவரும் இக்கோயிலில் வணங்கினால் எல்லா விதமான பிரச்னைகளும் தீரும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. இக்கோயில் தினமும் காலை 7 மணி முதல் 12.30 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News