Ayudha Puja: ஆயுதபூஜை கொண்டாடப்படுவது ஏன்? – எப்படி கொண்டாட வேண்டும்?
ஆயுத பூஜை வழிபாடு: புரட்டாசி மாதம் வந்து விட்டாலே பல பண்டிகைகளின் காலம் தொடங்கி விடும். அதில் முதல் பண்டிகையாக நவராத்திரி விழா கொண்டாடப்படும். நடப்பாண்டுக்கான நவராத்திரி பண்டிகை கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கியது. 9 நாட்கள் கொண்டாடப்படும் இப்பண்டிகையின் நிறைவு நாளில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய நிகழ்வுக கொண்டாடப்படுவது வழக்கம். நவராத்திரி என்றாலே நம் அனைவருக்கும் கொலு கண்காட்சி தான் நினைவுக்கு வரும். கோயில் மற்றும் இல்லங்களில் நடக்கும் கொலு வழிபாட்டில் கலந்து கொண்டால் பல பலன்களைப் பெறலாம் என சாஸ்திரங்கள் சொல்கிறது. இந்த ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையில் வழிபட முடியாதவர்கள் கடைசி இரண்டு நாட்களான சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய தினங்களில் வழிபட்டால் 9 நாட்களும் வழிபட்ட முழு பலனை பெறலாம் என சொல்லப்படுகிறது.
பெரும்பாலானோருக்கு இந்த நாட்கள் விடுமுறை நாட்களாக தான் தெரியும். தொடர் விடுமுறை நாட்கள் என பலரும் வழிபாடுகளை நடத்தாமல் வெளி இடங்களுக்கு சுற்றுலா செல்ல முனைவார்கள். ஆனால் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் கல்வி மற்றும் தொழில் என்பது மிக முக்கியமாகும். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை சிறப்பிக்கும் பொருட்டு சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. அதேபோல் தொழிலுக்கு பயன்படுத்தும் ஆயுதங்களை வழிபடும் பொருட்டு ஆயுத பூஜை கடைபிடிக்கப்படுகிறது.
அனைத்து இடங்களிலும் இரண்டு நிகழ்வுகளின் வழிபாடுகளும் ஒரே நாளிலோ அல்லது அடுத்தடுத்த நாளிலோ மேற்கொள்ளப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால் சரஸ்வதி பூஜை வழிபாடு செய்வதோடு ஆயுத பூஜை வழிபாடு சேர்ந்து செய்வது தான் பெரும்பாலானவர்களின் வழக்கமாக இருந்து வருகிறது.
இதில் ஆயுத பூஜை என்றதும் கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து தான் வழிபட வேண்டும் என பலரும் நினைக்கிறார்கள். இதுதொடர்பான நகைச்சுவை மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் காணலாம். ஆனால் அதுதான் கிடையாது. செய்யும் தொழிலே தெய்வம் என சொல்வார்கள். ஆண்டு முழுவதும் ஓய்வில்லாமல் நாம் செய்யும் தொழிலுக்கு ஓய்வு கொடுக்கும் நாளாக ஆயுத பூஜை அமைகிறது. மகிஷாசுரனை துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 அம்பிகைகளும் ஒன்று சேர்ந்து 9 நாட்கள் தவமிருந்து வதம் செய்தார்கள்.
Also Read: Vinesh Phogat: ஹரியானா தேர்தல்.. பாஜகவுக்கு எதிராக களம் கண்ட வினேஷ் போகத்.. வெற்றியா? தோல்வியா?
அதன்பிறகு அந்த வதம் செய்யும் ஆயுதத்திற்கு ஓய்வளித்தார்கள். இப்படித்தான் ஆயுத பூஜை வரலாறு உள்ளது. நம்மிடையே அப்படியான ஆயுதங்கள் என்பது கிடையாது. அன்றாட வாழ்வில் நம்முடைய குடும்பத்திற்கு லாபம் ஈட்டக்கூடிய தொழில்களில் பயன்படுத்தப்படும் கருவிகளே நமக்கான ஆயுதங்களாகும். அந்த பொருட்களை எல்லாம் வைத்து வழிபடக்கூடியது ஆயுத பூஜையாகும். இந்த நாளில் கார் , ஆட்டோ, பைக் போன்ற வாகனங்கள் தொடங்கி நாம் உபயோகிக்கும் லேப்டாப் வரை அனைத்தையும் ஆயுத பூஜையில் வைத்து வழிபடலாம்.
இந்த நாளில் வாகனங்களை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதற்கு பூ போட்டு சந்தனம் குங்குமம் வைத்து வழிபட வேண்டும். நம்மை ஆண்டு முழுவதும் காத்து பணிகளில் சிறப்புற செய்யும் வாகனங்களை இந்நாளில் வணங்குவதன் மூலம் ஆயுத பூஜை சிறப்பு பெறுகிறது.
சரஸ்வதி பூஜை வழிபாடு
எப்போதும் சரஸ்வதி பூஜைக்கு முதல் நாள் வீடு மற்றும் பூஜையறையை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்ய முடியாதவர்கள் பூஜை நாள் அன்று மஞ்சள் கலந்த தண்ணீர் தெளித்து வழிபாட்டில் ஈடுபடலாம்.ஆனால் அன்றைய நாளில் வீடு, பூஜை பொருட்களை கழுவக்கூடாது. அப்படியே பூஜையறையில் கோலம் போட்டு விட்டு குழந்தைகளின் பாட புத்தகங்கள், வீட்டின் கணக்கு வழக்குகள் அடங்கிய நோட்டுகள், வங்கிப் புத்தகம், வாகனங்களின் ஆர்சி புக் ஆகியவற்றை ஒரு பலகை மீது வைக்க வேண்டும். அதற்கு மேலாக வெண் பட்டு அல்லது வெள்ளை ஆடை விரித்து அலங்கரிக்கவும். இதன் நடுவே சரஸ்வதி தேவியின் படம் அல்லது சிலையை வைத்து வழிபடலாம். முடிந்தவர்கள் பால், பலகாரம், நைவேத்தியம் வைத்தும் வழிபடலாம்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)