David Warner: வாழ்நாள் தடை நீக்கம்.. மீண்டும் கேப்டனாகும் டேவிட் வார்னர்!
கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது டேவிட் வார்னர் உப்பு காகிதத்தை வைத்து பந்தை சேதப்படுத்தினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், அணி வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
டேவிட் வார்னர்: ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கேப்டன் ஆவதற்கு விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது டேவிட் வார்னர் உப்பு காகிதத்தை வைத்து பந்தை சேதப்படுத்தினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், அணி வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கேமரூனுக்கு 9 மாதமும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட ஓர் ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும் 2 வருடங்கள் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. டேவிட் வார்னருக்கு அவர் விளையாடும் வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் எந்த அணிக்கும் கேப்டனாக இருக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டது. இதனிடையே தடை நீக்கப்பட்டுள்ளதால் பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணியை வழிநடத்தும் தகுதியை டேவிட் வார்னர் பெற்றுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Also Read: Share Market : மீண்டும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை.. கடும் சரிவில் இண்டஸ்லேண்ட் வங்கி!
கேப்டனாக பதவி வகிக்க விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக வார்னர் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால் 2022 ஆம் ஆண்டு அதனை திரும்ப பெற்றுக் கொண்டு விசாரணை நடத்தப்படும் விதம் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். அதேசமயம் ஐபிஎல் போட்டிகளில் திறம்பட விளையாடி வருகிறார். இதனிடைய டேவிட் வார்னர் இந்த மாதத்தின் தொடக்கத்தில் தன் மீதான தடையை நீக்கக்கோரிய வழக்கை மூன்று பேர் கொண்ட விசாரணை குழுவிடம் முன் வைத்தார்.
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கேப்டனாக பதவி வகிக்க வார்னருக்கு விதிக்கப்பட்ட தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்டதில் இருந்து அவரின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது எனவும் அவர் கணிசமான மாற்றத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் விசாரணை குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடை விதிக்கப்பட்ட பின் தான் பங்கேற்ற போட்டிகளின் போது பந்தை சேதப்படுத்தவோ அல்லது எதிர் அணியினரை தூண்டிவிடும் செயலிலோ அவர் முயற்சிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2018 ஆம் ஆண்டு நடந்த தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள அவர் அது போன்ற நடத்தையில் இனிமேல் ஈடுபடமாட்டார் என்பதில் மறுஆய்வு குழு திருப்தி அடைந்துள்ளது. இதன் விளைவாக வார்னர் இனி கேப்டன் பதவி பெற தகுதியுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
37 வயதாகும் டேவிட் வார்னர் கடந்த ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவர் கடைசியாக விளையாடி இருந்தார். வார்னரின் ஓய்வுக்குப் பின்னர் ஆஸ்திரேலிய அணியில் டெஸ்ட் போட்டிகளில் சரியான தொடக்க வீரர் இல்லாமல் அந்த அணி திணறி வருகிறது. இதனிடையே சில தினங்களுக்கு முன் பேட்டி அளித்த வார்னர், “சரியான காரணங்களுக்காகத் தான் நான் ஓய்வு பெற்றேன் அணிக்கு தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் விளையாட தயாராக உள்ளேன். ஆஸ்திரேலியா அணிக்கு மீண்டும் தொடக்க வீரராக நான் ஆட தயார்” என தெரிவித்திருந்தார். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ள நிலையில் அதனை மனதில் வைத்து வார்னர் பேசுவதாக பலரும் தெரிவித்திருந்தனர். இப்படியான நிலையில் தான் அவர் மீதான கேப்டன்சி தடை நீக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி வரை விளையாடியுள்ள வார்னர் 115 டெஸ்ட் போட்டிகளில் 8,786 ரன்கள் எடுத்துள்ளார். 26 சதங்களை பதிவு செய்துள்ள அவர் இந்திய அணிக்கு எதிராக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன் மூலம் 1,218 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதமும் 3 அரை சதமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.