திண்டுக்கலில் டீக்கடை வடையில் இருந்த பூரான்.. ரெய்டு நடத்திய அதிகாரிகள்!
திண்டுக்கல் உணவு பாதுகாப்புத் துறையிடம் வடையில் பூரான் இருந்ததைப் பற்றி பியூலா புகார் அளித்தார். இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செல்வம் தலைமையிலான அதிகாரிகள் குழு ஜம்ஜம் டீக்கடைக்கு சென்று நேரில் ஆய்வு நடத்தினர். மேலும் அங்கிருந்தவர்களிடம் விசாரணையும் நடைபெற்றது. அப்போது வடைக்கு தயார் செய்யப்பட்ட மாவு மற்றும் அதற்காக தயாரிக்கப்பட்ட குருமா உள்ளிட்டவைகளை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டனர்.
வடையில் இருந்த பூரான்: திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் டீக்கடை ஒன்றில் வாங்கப்பட்ட வடையில் பூரான் இருந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் என்ஜிஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் பியூலா. இவர் தனது மகன் மற்றும் உறவினர் அஸ்வதியை அழைத்துக் கொண்டு என்ஜிஓ காலனி மெயின் ரோட்டில் இருக்கும் ஜம்ஜம் என்ற டீக்கடைக்கு வந்துள்ளார். அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வடையை வாங்கி 3 பேரும் சாப்பிட்டுள்ளனர். இதில் தனது மகனுக்கு வாங்கிய வடையை கடையில் கொடுக்கப்பட்ட குருமாவுடன் சேர்த்து ஊட்டியுள்ளார். அப்போது அதில் ஒருவடையில் பூரான் இருப்பதை கண்டு பியூலா மற்றும் அஸ்வதி இருவரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இருவரும் கடை உரிமையாளரிடம் வடையில் பூரான் இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் வாடிக்கையாளர் கொடுக்கப்படும் உணவில் கவனம் செலுத்த வேண்டும் என கண்டித்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் பியூலா மற்றும் அஸ்வதி ஆகிய இருவரின் குற்றச்சாட்டுக்கும் கடை உரிமையாளர் சரியாக பதிலளிக்காமல் இருந்துள்ளார். மேலும் தரக்குறைவாகவும், உங்கள் வீட்டில் எல்லாம் பூரான் இருக்காதா என்ற ரீதியிலும் பியூலா மற்றும் அஸ்வதியிடம் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட பியூலா தனது மகனுக்கு பூரான் இருந்த வடையை சாப்பிட்டதால் எதுவும் ஆகி விடக்கூடாது என்ற பயத்தில் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து முதலுதவி சிகிச்சை பெற்றார். மேலும் பியூலா மற்றும் அஸ்வதி இருவரும் முதலுதவி சிகிச்சைப் பெற்றனர்.
Also Read: DA Hike : மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
இதனை தொடர்ந்து திண்டுக்கல் உணவு பாதுகாப்புத் துறையிடம் வடையில் பூரான் இருந்ததைப் பற்றி பியூலா புகார் அளித்தார். இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செல்வம் தலைமையிலான அதிகாரிகள் குழு ஜம்ஜம் டீக்கடைக்கு சென்று நேரில் ஆய்வு நடத்தினர். மேலும் அங்கிருந்தவர்களிடம் விசாரணையும் நடைபெற்றது. அப்போது வடைக்கு தயார் செய்யப்பட்ட மாவு மற்றும் அதற்காக தயாரிக்கப்பட்ட குருமா உள்ளிட்டவைகளை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டனர். மீதி இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ச்சியாக உணவுச் சார்ந்த விஷயங்களில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டையில் நடந்த சம்பவம்
இதனிடையே புதுக்கோட்டையில் செயல்படும் பிரபல ஷவர்மா கடையில் சிக்கன் ரோல் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்தி சீல் வைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் புதுக்குளம் அருகே செயல்பட்டு வரும் இந்த ஷவர்மா கடையில் தட்சிணாமூர்த்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம் என்பவர் தனது மனைவி, மகள் மற்றும் இரண்டு மகன்கள் ஆகியோருடன் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி சென்று சிக்கன் ரோல் சாப்பிட்டுள்ளார். அடுத்த நாள் காலையில் 5 பேருக்கும் வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 5 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கணேஷ் நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரவீன் குமார் தலைமையிலான குழு ஷவர்மா கடையில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடன் பேசிய பிரவீன் குமார், “பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் ஷவர்மா சாப்பிடவில்லை என்றும் சிக்கன் ரோல் சாப்பிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அந்த கடையில் நடத்தப்பட்ட ஆய்வில் கெட்டுப்போன மூன்று கிலோ மசாலா தடவிய கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைக்கப்பட்டது என தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஷவர்மா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிலர் அதனை மீறி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.