அடுத்தடுத்த உயிரிழப்பு.. சிவராமனின் தந்தை இறப்பு.. கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் பகீர்!
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமன் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது தந்தை அசோக் குமார் நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் சிவராமன் மற்றும் அவரது தந்தை அசோக் குமார் மரணத்தில் மரணம் இருப்பதாக குற்றச்சாட்டியுள்ளனர்.
அடுத்தடுத்து உயிரிழப்பு: கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியான சிவராமன் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் நேற்று உயிரிழந்தார். கடந்த 18ஆம் தேதி போலீசாரிடம் தப்பிக்க முயன்றபோது தவறி விழுந்ததில் அரவது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில், அவர் கைது செய்யப்பட்டபோதே எலி மருந்தை தின்றுவிட்டதாக கூறினார். இது ரத்த மாதிரி பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து, நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், சிவராமனின் தந்தை அசோக்குமாரும் (61) உயிரிழந்துள்ளார். இவர் காவேரிப்பட்டிணம் திம்மாபுரம் காந்தி காலனியில் வசித்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் காவேரிப்பட்டிணத்தில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அசோக் குமார் பலத்த காயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “அசோக் குமார் மதுபோதையில் சென்றபோது விபத்தில் அவரது தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்” என்றனர்.
Also Read: முகம் சிதைந்த கொடூரம்.. மனைவியை கொலை செய்த கணவன்.. திடுக் வாக்குமூலம்!
இந்த வழக்கில் அடுத்தடுத்த மரணங்கள் ஏற்படுவதால் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. மேலும், இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் சிவராமன் மற்றும் அவரது தந்தை அசோக் குமார் மரணத்தில் மரணம் இருப்பதாக குற்றச்சாட்டியுள்ளனர். மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் யாரையோ காப்பாற்ற சிவராமன் மற்றும் அவரது தந்தை கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த 5ஆம்தேதி முதல் 9ம் தேதி வரை என்.சி.சி முகாம் நடைபெற்றது. இதில் அந்தப் பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்ட நிலையில் முகாமில் பங்கேற்ற 8ஆம் வகுப்பு மாணவியை என்சிசி பயிற்சியாளரும் முன்னாள் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான சிவராமன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: குடற்புழு நீக்க நாள்.. மாணவர்களுக்கு மாத்திரை கொடுத்து விழிப்புணர்வு..
அது மட்டுமல்லாமல் முகாமிற்கு வந்துள்ள 13 மாணவிகள் பாலியல் தொந்தரவு உள்ளாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.இதனிடையே பாதிக்கப்பட்ட 8 ஆம் வகுப்பு மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் சிவராமன் கைது செய்யப்பட்டார். மேலும் குற்றம் நடந்தது தெரிந்தும் அதை மறைக்க முயற்சி செய்த பள்ளியின் முதல்வர், தாளாளர், உள்ளிட்ட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.