TVK Vijay: அடுக்கடுக்கான புகார்கள்.. த.வெ.க கொடியால் சிக்கலில் விஜய்!
முதலில் அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு வாழ்த்துகள் மட்டுமே தெரிவித்து வந்த அவர், யாரும் எதிர்பாராத வகையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்த சம்பவத்தில் முதல் ஆளாக தமிழ்நாடு அரசுக்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். இப்படியான நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா நேற்று நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழகம்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார். இதனால் திரையுலகம் மட்டுமல்லாது அரசியல் உலகமும் பரபரப்புக்குள்ளானது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய இலக்கு என்ற குறிக்கோளுடன் விஜய் செயல்பட்டு வருகிறார். முதலில் அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு வாழ்த்துகள் மட்டுமே தெரிவித்து வந்த அவர், யாரும் எதிர்பாராத வகையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்த சம்பவத்தில் முதல் ஆளாக தமிழ்நாடு அரசுக்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். இப்படியான நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா நேற்று நடைபெற்றது.
வாகை மலர் நடுவில் இருக்கும் நிலையில் அதனை சுற்றி பல்வேறு வண்ணங்களிலான 28 மாநிலங்களை குறிக்கும் வகையில் நட்சத்திரம் உள்ளது போல கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வாகை மலருக்கு இரண்டு பக்கமும் யானைகள் இரண்டு முன்னங்கால்களையும் தூக்கி ஆசீர்வாதம் வழங்கும் வகையில் பிளிரும்படியான காட்சிகளும், பின்னணியில் மஞ்சள், சிவப்பு வண்ணம் கலந்தும் இடம் பெற்றுள்ளது. இந்த கொடி அறிமுக நிகழ்ச்சி இந்திய அளவில் ட்ரெண்டானது. விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற இருப்பதாகவும், அதில் கட்சியில் கொள்கை கோட்பாடுகள், கொடிக்கான காரணம் என்ன என்பதெல்லாம் தெரியப்படுத்துவோம் எனவும் விஜய் கூறினார்.
இதனிடையே விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுகமான அடுத்த சில மணி நேரங்களில் சர்ச்சையை கிளப்ப தொடங்கியது. அந்த கொடியில் இடம்பெற்றிருக்கும் யானையை சுட்டிக்காட்டி, தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தேர்தல் ஆணையம் விதிமுறைப்படி சிக்கிம், அசாம் ஆகிய மாநிலங்கள் தவிர எந்த மாநிலமும் யானையை அடையாளமாக பயன்படுத்தக்கூடாது. எனவே அதனை நீக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆனந்தன் வலியுறுத்தினார்.
இந்நிலையில் த.வெ.க. கொடி விவகாரத்தில் விஜய் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் செல்வம் என்ற சமூக ஆர்வலர் புகாரளித்துள்ளார். அதில் உயிருள்ள விலங்குகளை தேர்தல் ஆணைய விதிமுறைப்படி கொடியில் பயன்படுத்தக்கூடாது. கேரள அரசின் சின்னம் கொடியில் உள்ளது. மேலும் இலங்கை தமிழர்களின் சின்னமாக விளங்கும் வாகைப்பூ தவறான வழியில் பயன்படுத்தப்பட்டுள்ளது என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் கொடி விவகாரம் குறித்து அமைதி காத்து வரும் தமிழக வெற்றிக் கழகம்,தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டால் மட்டும் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.