Tamil Nadu Rains Updates: மழைநீர் அகற்றப்படும் வரை தொடர் களப்பணி – முதல்வர் ஸ்டாலின் உறுதி!
Weather Updates Live in Tamil: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை சென்னை அருகே புதுச்சேரி மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை முதல் படிப்படியாக சென்னையில் மழை அதிகரிக்ககூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, சென்னைக்கு (தமிழ்நாடு) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 440 கி.மீ தொலைவில் அதே பகுதியில்மையம் கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 460 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை (17 அக்டோபர்)சென்னை அருகே புதுச்சேரி மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை முதல் படிப்படியாக சென்னையில் மழை அதிகரிக்ககூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை சென்னை அருகே கரையை கடக்கும் என்பதால் சென்னையில் அதி தீவிர மழை இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
LIVE NEWS & UPDATES
-
செங்குன்றம் அருகே வெள்ளம்.. சிக்கிய 50 பேர் மீட்பு
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே குடியிருப்பு பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 50 பேரை ரப்பர் படகு மூலம் மீட்பு படையினர் மீட்டனர்
-
முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரை களப்பணி – முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!
கனமழை குறித்த ‘அலெர்ட்’ பெறப்பட்டவுடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பொதுமக்களின் ஒத்துழைப்போடு எதிர்கொண்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பெரும்பாலான இடங்களின் மழைநீர் தேங்காமல் சரிசெய்யப்பட்டுள்ளது. முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரையில் தொய்வின்றிக் களப்பணியைத் தொடர்ந்திடுவோம் எனவும் கூறியுள்ளார்
-
-
4 மணி நேரத்தில் வடிந்த மழைநீர் – அமைச்சர் கே.என்.நேரு தகவல்
கனமழையால் சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக சுமார் 4 மணி நேரத்தில் நீர் வடிந்ததாக கூறியுள்ளார்.
-
வெள்ளத்தில் இருந்து விரைவில் நிரந்தர தீர்வு – முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை பள்ளிக்கரணையில் நடைபெற்ற மழைநீர் வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணப்பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அப்போது வெள்ளத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையின் புறநகர் பகுதி மக்களுக்கும் விரைவில் நிரந்தர தீர்வு அளிக்கப்படும் என ஊடகத்தினர் மத்தியில் தெரிவித்தார்.
-
சென்னையில் ஒரே ஒரு சுரங்கப்பாதை மட்டுமே மூடல் – போக்குவரத்து காவல்துறை
சென்னையில் பெய்த கனமழையால் பல இடங்களிலும் தேங்கிய தண்ணீர் வடிந்து இயல்பு நிலை தொடங்கியுள்ளது. பகல் 1 மணி நிலவரப்படி கணேசபுரம் சுரங்கப்பாதை மட்டுமே மூடப்பட்டுள்ளது என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
-
நாளை சென்னை அருகே கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கொட்டப்போகும் மழை
நேற்று (15-10-2024) காலை தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை 0530 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (16-10-2024) காலை 0830 மணி அளவில், அதே பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 400 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் – நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17-ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கக்கூடும்.
-
4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. எந்தெந்த பகுதிகளில்?
வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
-
முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் மழை குறைந்துள்ள நிலையில் நாராயணபுரம் ஏரியின் நீர் அளவை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்
-
மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்? எத்தனை நிமிட இடைவெளியில் ரயில் இயக்கம்?
மெட்ரோ சேவைகள் தற்போது பின்வரும் அட்டவணையில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பச்சை வழி பாதை: (புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய மெட்ரோ முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ வரை) – ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில் இயக்கப்படும். நீல வழிப்பாதை (விம்கோ நகர் டிப்போவிற்கு விமான நிலையம்) – ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கும் ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல், வண்ணாரப்பேட்டை மெட்ரோ & அறிஞர் ஆலந்தூர் மெட்ரோ இடையே – ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் வாகனங்களை கோயம்பேடு மெட்ரோ, செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ நிலையம் மற்றும் தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள மற்ற வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை நிவாரண முகாம்களில் 2,789 பேர் தங்கியுள்ளனர்..!
சென்னையில் நேற்று முதல் பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் அருகில் இருக்கும் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். சென்னையில் இருக்கும் 70 நிவாரண முகாம்களில் சுமார் 2,789 பேர் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சோழவரத்தில் 30 செ.மீ மழை.. கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித்தீர்த்த மழை..
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) 30, ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர் மாவட்டம்) 28, ஆவடி (திருவள்ளூர் வட்டம்) 25, மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை மாவட்டம்) 23, மண்டலம் 02 D15 மணாலி (சென்னை மாவட்டம்) 21, மண்டலம் 06 திரு.வி.கே நகர் (சென்னை மாவட்டம்) 19, மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை மாவட்டம்), மண்டலம் 13 U39 அடையாறு (சென்னை மாவட்டம்), புழல் ஏஆர்ஜி (திருவள்ளூர் மாவட்டம்), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை மாவட்டம்) தலா 18, மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை மாவட்டம்), பெருங்குடி (சென்னை மாவட்டம்), மண்டலம் 02 மணலி (சென்னை மாவட்டம்), இந்துஸ்தான்_பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம் மாவட்டம்), எண்ணூர் AWS (சென்னை மாவட்டம்) தலா 17ம் செ.மீ மழை பதிவாகியுள்ளது.
-
மதியம் 1 மணி வரை 10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது மதியம் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு..
சென்னையில் கனமழை பதிவாகி வரும் நிலையில், மாநகர பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. நேற்று சென்னையில் கனமழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில் பேருந்து இயக்கத்தில் பாதிப்பு இருந்தது. ஆனால் இன்று அனைத்து வழி தடங்களிலும் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நாளை அதிகாலை சென்னைக்கு அருகே கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 05.30 மணிநேர நிலவரப்படி அதே பகுதியில் அட்சரேகை 12.1° N மற்றும் தீர்க்கரேகை 83.4° E, சென்னைக்கு (தமிழ்நாடு) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 360 கி.மீ., புதுச்சேரிக்கு கிழக்கே 390 கி.மீ., நெல்லூருக்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 450 கி.மீ நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 17 ஆம் தேதி அதிகாலையில் சென்னைக்கு அருகில், புதுச்சேரி மற்றும் நெல்லூர் இடையே வடக்கு தமிழ்நாடு – தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சோழவரத்தில் 300 மி.மீ கடந்த மழை பதிவு.. முதல் நாளிலே கொட்டிய மழை..
நேற்று பெய்த கனமழையில், திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம் 300 மிமீ அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரெட்ஹில்ஸ் அருகில் 279 மி.மீ., வடசென்னையில் உள்ள இடையாஞ்சாவடியில் 260 மி.மீ., ஆவடியில் 255 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
First Triple Century of the Season with Cholavaram 300+ mm rainfall in Tiruvallur district.
Redhills is close by at 279 mm.
Edayanchavadi in north Chennai 260 mm.
Avadi gets 255 mm. pic.twitter.com/W8RfF79veo
— Tamil Nadu Weatherman (@praddy06) October 16, 2024
-
சென்னைக்கு அதிகனமழை இருக்காது.. வெதர்மேன் பிரதீப் கொடுத்த அப்டேட்..
சென்னையில் எதிர்ப்பார்த்த அளவு அதிகனமழை இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், “ காற்றழுத்த தாழ்வு நிலை சென்னையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், காற்று கடக்கும் பகுதி வடக்கே இருக்கும் என்பதால் சென்னைக்கு அதிகனமழை இருக்காது. சீரான மழையே இருக்கும். எதிர்ப்பார்த்த அளவு மழை பொழிவு இருக்காது. சமாளிக்கக்கூடிய அளவே மழை இருக்கும். இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தெற்கு ஆந்திராவுக்கு மாறிவிட்டதால் எதிர்ப்பார்த்தன் மழை இருக்காது எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களில் சென்னையில் சில இடங்களில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Some good news for KTCC (Chennai) – Steady rains to continue for a while
——————–
Though the Depression is expected to cross over Chennai, the convergence of winds will be north of the crossing area so people of Chennai can relax a bit. The extreme rains today from… pic.twitter.com/ap7gN2gTRL— Tamil Nadu Weatherman (@praddy06) October 16, 2024
-
குட் நியூஸ் சொன்ன வெதர்மேன்
பெரிய கனமழை இல்லை. சாதாரண மழைக்கே வாய்ப்பு. எனவே மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தை வீட்டிற்கு கொண்டு வரலாம் – குட் நியூஸ் சொன்ன வெதர்மேன்
-
கனமழை எதிரொலி.. 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..
கடந்த 2 நாட்களாக வட தமிழகத்தில் கனமழை பதிவாகி வரும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேலம், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் வேலூரில் இடி மின்னலுடன் கூடியம் மிதமான மழையும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.