Governor Ravi: “எனக்கு எதிராக இனவாத கருத்தா?” தமிழக முதல்வருக்கு ஆளுநர் ரவி பதிலடி!
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி பதலளித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதலளித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின், அவர்கள் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி பதில்
ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.
மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் நன்றாக அறிவார். பிரதமர்மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழை கொண்டு சென்றார்.
Also Read: கொடூரத்தின் உச்சம்.. நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு சித்ரவதை.. நெல்லையில் ஷாக்!
ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன்.
“Hon’ble Chief Minister Thiru. @mkstalin has issued a regrettable tweet this evening in which he made a racist remark against me and levelled false allegation of showing disrespect to Tamizh Thaai Vaazhthu. He knows it well that I recite full Tamizh Thaai Vaazhthu at every…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 18, 2024
“எனக்கு எதிராக இனவாத கருத்தா?”
அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது.
தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் அவர்கள் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்.” என்று கடுமையான விமர்சனத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்:
சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து ‘இந்தி மாதம்’ நிறைவு நாள் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இதில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி பாடப்படாததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதற்கு டிடி தமிழ் தொலைக்காட்சியும் விளக்கம் அளித்திருக்கிறது. அதாவது, கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றும் தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை வேண்டும் என்றும் என்று விளக்கம் அளித்திருக்கிறது. மேலும், இது தொடர்பாக, தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று டிடி தமிழ் தொலைக்காட்சி கூறியிருக்கிறது.
Also Read: “கவனக்குறைவால் நடந்திச்சு.. மன்னிச்சிடுங்க” தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்.. டிடி தமிழ் விளக்கம்!
மத்திய மாநில அரசுகளுக்கிடையே தொடர்ந்து போக்கு போக்கு நிலவுகிறது. மத்திய அரசின் பிரதிநிதிகளாக கருதப்படும் ஆளுநர்கள் மாநில அரசுடன் முட்டிட மோதி வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஆளுநருக்கு மாநில அரசுக்கும் கருத்து மோதல் நிலவி வருகிறது. நீட் விலக்கு மசோதா, சனாதனம் குறித்த பேச்சு என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆளுநருக்கு, மாநில அரசுக்கு மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.