TVK Party: “அரசியல்வாதியை நம்ப முடியாது” – விஜய்யை அட்டாக் செய்த தமிழிசை! - Tamil News | tamilisai soundararajan criticized thalapathy vijay tamilaga vettri kazhagam party | TV9 Tamil

TVK Party: “அரசியல்வாதியை நம்ப முடியாது” – விஜய்யை அட்டாக் செய்த தமிழிசை!

Published: 

04 Oct 2024 16:45 PM

Tamilaga Vettri Kazhagam: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடு அனைத்தும் திராவிட முன்னேற்ற கழகத்தை பின்பற்றியே உள்ளது. திமுகவினர் பெரியாரை கும்பிடுவார்கள். ஆனால் நாள் , நட்சத்திரம் பார்த்து தான் எல்லாவற்றையும் செய்வார்கள். நாடாளுமன்ற தேர்தலின் போது வேட்புமனு தாக்கல் தொடங்கி அனைத்து விஷயங்களிலும் எங்களை விட அதிகமாக ஆன்மீக ரீதியாக நல்ல நேரம், ஆடை நிறம், காலம் பார்த்து தான் செய்தார்கள். இதைத்தான் வேண்டாம் என சொல்கிறேன்.

TVK Party: “அரசியல்வாதியை நம்ப முடியாது” -  விஜய்யை அட்டாக் செய்த தமிழிசை!

தமிழிசை சௌந்தராஜன் - விஜய் (கோப்பு புகைப்படம்)

Follow Us On

தமிழக வெற்றிக் கழகம்: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.கிராமத்தில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்று காலை மாநாடு நடைபெறும் இடத்தில் விமரிசையாக பூமிபூஜை நடைபெற்றது. இதில் காணொளி வாயிலாக விஜய் கலந்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து தொண்டர்களுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், “என்னுடைய நெஞ்சில் நீண்ட காலமாக தமிழ்நாடு மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும். இன்னும் முழுமை பெறாத அவர்களின் அடிப்படை தேவைகளை நிரந்தரமாக பூர்த்தி செய்ய வேண்டும். அதனை சட்டபூர்வமாக அரசியல் ரீதியாக உறுதியாக நிறைவேற்றி காட்ட வேண்டும் என்ற லட்சிய கனல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதனிடையே நமது முதல் மாநில மாநாட்டுக்கான கால்கோல் விழா இனிதே நடைபெற்றுள்ளது” என தெரிவித்திருந்தார்.

Also Read:Crime: இளமையாக மாறலாம்.. முதியவர்களை குறிவைத்து ரூ.35 கோடி மோசடி!

மேலும் இந்த மாநாடு நம்முடைய அரசியல் கொள்கை பிரகடன மாநாடாகும். நம்மிடம் உற்சாகம், கொண்டாட்டம், குதூகலம் இருக்கலாம். ஆனால் நம் தொண்டர்கள் ஓரிடத்தில் கூடினால் அந்த இடம் கட்டுப்பாடுமிக்கதாகவும், பக்குவமிக்கதாகவும் இருக்க வேண்டும். நம் மீது, “இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா?, களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா?” என கேள்விகளை வீசுவதில் சிலர் அதிக விருப்பம் கொண்டவராக இருக்கிறார்கள். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டும்போது அவர்களுக்கு புரியும். விரைவில் வி.சாலை எனும் வெற்றிச்சாலையில் சந்திப்போம்” என விஜய் அந்த கடித்தத்தில் பல விஷயங்களை பேசி இருந்தார்.

பதிலடி கொடுத்த தமிழிசை

இந்நிலையில் சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் விஜய் பற்றியும், தமிழக வெற்றிக் கழகம் பற்றியும் கடுமையாக விமர்சித்தார். அதாவது, “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கடிதத்தில் ஒரு வார்த்தையை குறிப்பிட்டு இருந்தார். அதாவது மற்ற கட்சிகளைப் போல் நம்முடைய கட்சி சாதாரண கட்சி அல்ல என தெரிவித்திருந்தார். இந்தியாவில் ஆண்ட கட்சி, ஆளுகிற கட்சி, மத்தியில் பல மாநிலங்களை ஆட்சி செய்யும் கட்சி, பல ஆண்டு காலமாக பல கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் எல்லாம் இருக்கிறது. ஆனால் விஜய் தன் கடிதத்தில் சொன்ன அந்த வார்த்தையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. உங்கள் கட்சியை நீங்கள் உயர்வாக சொல்லலாம். ஆனால் மற்ற கட்சிகளை சாதாரண கட்சி என சொல்லும் அளவுக்கு நீங்கள் எந்த அளவு உயர்ந்து விட்டீர்கள் என தெரியவில்லை. எனவே அரசியல் கட்சி தலைவராக இருக்கும்போது மற்ற தலைவர்களையும் மதிக்க வேண்டும். மற்ற கட்சிகளையும், அக்கட்சியின் தொண்டர்களையும் மதிக்க வேண்டும்” என்பது எனது கோரிக்கையாக உள்ளது.

Also Read: SBI : எஸ்பிஐ வழங்கும் “Green Rupee Term Deposit”.. வட்டி மட்டும் சிறப்பு அம்சங்கள் என்ன?

தொடர்ந்து கட்சி மாநாடு தொடர்பாக நடைபெற்ற பூமி பூஜை விழாவை பற்றி பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், “விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடு அனைத்தும் திராவிட முன்னேற்ற கழகத்தை பின்பற்றியே உள்ளது. திமுகவினர் பெரியாரை கும்பிடுவார்கள். ஆனால் நாள் , நட்சத்திரம் பார்த்து தான் எல்லாவற்றையும் செய்வார்கள். நாடாளுமன்ற தேர்தலின் போது வேட்புமனு தாக்கல் தொடங்கி அனைத்து விஷயங்களிலும் எங்களை விட அதிகமாக ஆன்மீக ரீதியாக நல்ல நேரம், ஆடை நிறம், காலம் பார்த்து தான் செய்தார்கள். இதைத்தான் வேண்டாம் என சொல்கிறேன். வெளிப்படையாக உங்கள் கொள்கைகளை சொல்லிவிட்டு செயல்படுங்கள்” என தெரிவித்தார். திராவிட மாடல் மாதிரி விஜய் கட்சி மூலம் இன்னொரு குட்டி திராவிட மாடல் உருவாகிறது என தோன்றுகிறது என்று அவர் கூறினார்.

இதனையடுத்து அரசியலுக்கு வருபவர்கள் இதுதான் தன்னுடைய கடைசிப்படம் என சொல்கிறார்களே என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “விஜய் நடித்த வரும் 69 ஆவது படம் அவருடைய கடைசி படமா என தெரியவில்லை. இது மாநாட்டுக்கு முந்தைய கடைசி படமாகவோ, மாநாட்டுக்கு பிந்தைய கடைசி படமா அல்லது தேர்தலுக்கு பிந்தைய கடைசி படமாக என தெரியவில்லை. காரணம் நிலைமை மாறலாம். அரசியல்வாதிகள் பேசுவதையெல்லாம் எந்த அளவுக்கு நம்ப முடியும் என தெரியவில்லை. அதனால் விஜய் வரட்டும் பார்க்கலாம். விஜய் மாநாட்டை சிறப்பாக நடத்தி விடுவார். காரணம் திரைத்துறை சார்ந்தவர்களுக்கான கூட்டம் கூடுவது என்பது சாதாரணமான விஷயம் தான். மாநாடெல்லாம் வெற்றிகரமாக நடத்தி விடலாம் ஆனால் கட்சி நடத்துவது தான் சிரமம்” என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version