ரேசன் கடையின் நேரம் மாறுதா? தீயாய் பரவிய தகவல்.. தமிழக அரசு விளக்கம் இதோ!
ரேஷன் கடைகளின் பணியாளர்கள் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், கடைபிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பல ஆயிரம் ரேஷன் கடைகள் மூலம் கோடிக்கணக்கு விலையில்லா அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகரில் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்பட்டு வருகின்றன. சென்னை மற்றும் புறநகரில் மதியம் ரேஷன் கடைகளை மூடி மீண்டும் திறப்பதற்கு 2.30 மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது. அந்த சமயத்தில் தான், கார்டு தாரர்கள் வாங்காத பொருட்களை, சில ஊழியர்கள் கடைக்கு வெளியே அனுப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதாக, கூட்டுறவு மற்றும் உணவு துறை உயர் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் முறைகேட்டை தடுக்க கைரேகை வைத்தே பொருட்களை வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரேஷன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களின் ஸ்மார்ட் கார்டுகளை ஸ்கேன் செய்து கைவிரல் ரேகைகளை பதிவு செய்ய பி.ஓ.எஸ். என்ற கருவி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் ரேஷன் கடைகள் மதியம் மூடப்படும் நேரத்தை குறைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ரேஷன் கடைகள் பணி நேரம் மாற்றம் மற்றும் விடுமுறை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மேலும், தற்போது மாதத்தில் முதல் 2 வெள்ளிக்கிழமை விடுமுறை, முதல் 2 ஞாயிற்றுக்கிழமைகள் பணிநாளாக செயல்பட்டு வருகிறது. ஒரே நாளில் சீராக விடுமுறை அளிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. ரேஷன் கடை பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர் போன்ற தகவல்கள் இணையத்தில் பரவியது.
Also read… உருவாகும் ரிமல் புயல்.. வெளுக்கப்போகும் மழை.. தமிழ்நாடு நிலைமை என்ன?
ஆனால் இது குறித்து தமிழ்நாடு அரசு அளித்த விளக்கத்தில் ரேஷன் கடைகளின் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், உரிய நேரத்தில் ரேஷன் கடைகளை திறக்கவும் பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணியை சரியாக செய்யாத நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.