”ஆஃபர் என்பது அரசியலில் கடைசி அஸ்திரமாகத் தான் இருக்க வேண்டும்” – விஜய்க்கு பதிலடி கொடுத்த திருமா.. - Tamil News | vck leader thirumavalavan has released a statement related to tvk vijay party meeting | TV9 Tamil

”ஆஃபர் என்பது அரசியலில் கடைசி அஸ்திரமாகத் தான் இருக்க வேண்டும்” – விஜய்க்கு பதிலடி கொடுத்த திருமா..

த,வெ.க தலைவர் விஜய், தமிழ்நாட்டு அரசியலில் கட்சிகள் யாரும் சொல்லாத ஒன்றை சொல்லியுள்ளார். அதாவது கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என குறிப்பிட்டார். இது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் விசிக தலைவர் திருமாவளவன், “ ஆஃபர் என்பது அரசியலில் கடைசி அஸ்திரமாக தான் பயன்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

”ஆஃபர் என்பது அரசியலில் கடைசி அஸ்திரமாகத் தான் இருக்க வேண்டும்” - விஜய்க்கு பதிலடி கொடுத்த திருமா..

கோப்பு புகைப்படம்

Published: 

28 Oct 2024 22:45 PM

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இருக்கும் வி சாலையில் நடைபெற்றது. அப்போது அக்கட்சி தலைவர் விஜய், கட்சி கொள்கை மற்றும் தீர்மானங்கள் குறித்து பல்வேறு விஷயங்களை பேசினார். அதில் முக்கியமாக இதுவரை தமிழ்நாட்டு அரசியலில் கட்சிகள் யாரும் சொல்லாத ஒன்றை சொல்லியுள்ளார். அதாவது கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என குறிப்பிட்டார். இது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் விசிக தலைவர் திருமாவளவன், “ ஆஃபர் என்பது அரசியலில் கடைசி அஸ்திரமாக தான் பயன்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை மூலம் பதிலடி கொடுத்த திருமா:

கூட்டணி ஆட்சி குறுத்து பேசியதும் அது விசிக கட்சியை நோக்கி வீசப்படும் வலை தான் என பரவளான கருத்து வெளியானது. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில் ஆற்றிய உரையில் சில விழைவுகளை வெளிப்படுத்தியுள்ளார். சில நிலைப்பாடுகளையும் முன்மொழிந்துள்ளார். தனது கட்சி ஆளுங்கட்சியாகப் பரிணமிக்க வேண்டுமென அவர் ஆசைப்படுவது அவருக்கான சுதந்திரம்! நம்பிக்கை! ஆனால், பரிணாமத்தில் பல்வேறு படிநிலை மாற்றங்களை கடந்த பின்னரே உச்சநிலை மாற்றத்தை எட்டமுடியும் என்பது தவிர்க்க முடியாத அறிவியல் உண்மை! ஆனால் அவரது நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் வள்ளுவப் பெருமானின் சமத்துவக் கோட்பாட்டினைத் தனது முதன்மையான கொள்கையென உயர்த்திப் பிடிக்கும் அவர், ‘பெரும்பான்மை – சிறுபான்மை’ என்னும் பெயரிலான “பிளவுவாதத்தை” ஏற்பதில்லை என்றும் கூறுகிறார். இந்த நிலைப்பாடு பாஜக உள்ளிட்ட சங்பரிவார்களுக்கு எதிரானது என்பதைப் போன்ற தோற்றத்தைக் காட்டுகிறது.

விஜய் பேசிய ஃபாசிசம் – பாயாசம்:

அடுத்து, ஃபாசிசம் குறித்து அவர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஃபாசிசம் என்பது பற்றிய அவரது புரிதல் விளங்கவில்லை. “அவங்க ஃபாசிசம்’னா நீங்க பாயாசமா ?” என ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார். ஃபாசிச எதிர்ப்பாளர்களைக் கேலி் செய்கிறார். அவர் ஃபாசிசத்தை எதிர்க்க வேண்டியதில்லை என்கிறாரா? அல்லது எதிர்ப்பவர்களும் ஃபாசிஸ்டுகள் தான் என்கிறாரா? அவர் யாரை நையாண்டி செய்கிறார்? திமுக’வையா? காங்கிரசையா? இடது சாரி கட்சிகளையா? அல்லது புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் இயக்கங்களையா?

தமிழ்நாடு அல்லது இந்தியாவைப் பொருத்தவரையில் “ஃபாசிச எதிர்ப்பு” என்பது பாஜக-சங் பரிவார் எதிர்ப்பு தான். இங்கே ஃபாசிச எதிர்ப்பு என்பது தேவையற்றது என்று அவர் கருதுகிறாரா? அப்படியெனில், பாஜக- சங்பரிவார் எதிர்ப்பு வேண்டாம் என கூறுகிறாரா? என்ன பொருளில் அந்த நையாண்டி தொனிக்கும் ஆவேச உரை வெடித்தது ?

பிளவு வாதத்தை எதிர்ப்பதாகக் கூறுவதன் மூலம் பாஜகவை எதிர்ப்பதைப்போன்ற தோற்றம் ஒருபுறம். ஃபாசிச எதிர்ப்பைக் கிண்டல் செய்வதன் மூலம் பாஜக எதிர்ப்புத் தேவையில்லை என்பதைப் போன்ற தோற்றம் இன்னொரு புறம். இது என்னவகை நிலைப்பாடு?

பழைய சரக்கு விஜய்:

” கூட்டணியில் இணைய வருவோருக்கு ஆட்சியதிகாரத்தில் பங்கு” என்கிற ஒரு புதிய நிலைபாட்டை தமிழக அரசியல் களத்தில் முதன் முதலாக முன்மொழிந்துள்ளார். இது அரசியல் களத்தில் அவர் வீசும் அணுகுண்டு என்றும் பெருமிதம் பொங்கக் கூறியுள்ளார். ஆனால், இது யுத்த களத்தில், உரிய நேரத்தில், உரிய இலக்கில் வீசியதாகத் தெரியவில்லை. அது அவர் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா எனத் தெரியவில்லை.

அவரது உரையில் வெளிப்படும் “அதிகார வேட்கையும் அடையாள அரசியலும்” பழைய சரக்குகளே! குடும்ப அரசியல் எதிர்ப்பு , ஊழல் ஒழிப்பு போன்றவையும் பழைய முழக்கங்களே! ஆக்கப்பூர்வமான- புதுமையான நிலைப்பாடுகளோ செயல்திட்டங்களோ அவற்றுக்கான புரட்சிகர முன்மொழிவுகளோ ஏதுமில்லை. “பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல” ஆட்சியதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளது.

ஆஃபர் (OFFER) என்பது அரசியல் களத்தில் கடைசி அஸ்திரமாகத் தான் இருக்க வேண்டும். இயன்றவரை மறைமுக செயல்திட்டமாகவும் இருத்தல் வேண்டும். ஆனால், டிமான்ட் (DEMAND) என்பது முன்கூட்டியே கோருவதாகவும் வெளிப்படையாகவும் இருக்கலாம். ஒட்டுமொத்தத்தில், பல இலட்சம் பேர் முன்னிலையில் நடந்து முடிந்த இன்னொரு படப்பிடிப்பைப் போல இந்த மாநாடு நடந்தேறியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

ஐபோன் 16-க்கு தடை விதித்த இந்தோனேசியா - ஏன் தெரியுமா?
உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும் பூண்டு!
நடிகை சினேகாவிற்கு பிடித்த நடிகர் இவர்தான்!
மாஸ் ஹீரோதான் இந்தப் பையன்... யார் தெரியுதா?