Heatwave Death: சவுதியில் நிலவும் கடுமையான வெப்பநிலை.. ஹஜ் பயணிகள் 550 பேர் உயிரிழப்பு..!
Heatwave Death: இந்த ஆண்டு ஹஜ் பயணத்தின் போது குறைந்தது 550 பயணிகள் உயிரிழந்ததாக அங்கிருக்கும் தூதர்கள் தெரிவித்துள்ளனர். கடுமையான வெப்பநிலை காரணத்தால் பயணிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் , 323 பேர் எகிப்தியர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹஜ்ஜிற்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வெப்பத்தில் இருந்து பாதுகாத்துகொள்வது எப்படி என்பது குறித்து விளக்கமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மக்கள் குடையுடன் செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹஜ் பயணிகள் உயிரிழப்பு: இந்த ஆண்டு ஹஜ் பயணத்தின் போது குறைந்தது 550 பயணிகள் உயிரிழந்ததாக அங்கிருக்கும் தூதர்கள் தெரிவித்துள்ளனர். கடுமையான வெப்பநிலை காரணத்தால் பயணிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் , 323 பேர் எகிப்தியர்கள் என்றும், முதலில் அவர்கள் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உயிரிழந்த எகிப்தியர்கள் அனைவரும் வெப்பநிலை காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் மட்டுமே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மெக்காவின் அல்-முஐசெமில் உள்ள மருத்துவமனை உறுதி செய்தது. மேலும், உயிரிழந்தவர்களில் குறைந்தது 60 பேர் ஜோர்டானைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு சிலர் மட்டுமே கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவு மெக்காவில் வெப்பநிலை கடுமையாக இருப்பதாகவும் இதன் காரணமாக வெப்ப அலை வீசி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக மெக்காவில் இருக்கும் ஹஜ் கருதப்படுகிறது. ஒவ்வொரு இஸ்லாமியர்களும் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. ஹஜ் இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு சுமார் 18 லட்சம் பேர் வருகை தருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மெக்காவில் கடுமையான வெப்பநிலை பதிவாகி வருகிறது. திங்கட்கிழமையன்று 51 டிகிரி செல்சியஸ் அதாவது 125 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. முன் எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு கடுமையான வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில் வெப்ப அலையும் வீசுகிறது. இதனால் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
கடுமையான வெப்பநிலை காரணமாக அங்கு வரும் பயணிகளுக்கு வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஆலோசனை வழங்கப்படுகிறது. ஹஜ்ஜில் பல்வேறு சடங்குகள் திறந்தவெளியில் நடத்தப்படுவதால் மக்கள் குடையுடன் செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு வருபவர்களுக்கு தண்ணீர் விநியோகமும் செய்யப்படுகிறது. இருப்பினும் இந்த ஆண்டு சுமார் 2,000 த்துக்கும் மேற்பட்டோர் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 240 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதில் பெரும்பாலானோர் இந்தோனேசியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக முன்பதிவு செய்யாத பயணிகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சவுதி அதிகாரிகள் இது தொடர்பாக கூறும்போது மெக்காவிலிருந்து நூற்றுக்கணக்கான பதிவு செய்யாத பயணிகளை வெளியேற்றி வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், சவூதியின் சுகாதார அமைச்சர் ஃபஹ்த் பின் அப்துல் ரஹ்மான் அல்-ஜலாஜெல் கூறுகையில், ஹஜ்ஜிற்கான சுகாதாரத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதாகவும் , இது பெரிய நோய்த்தொற்றை ஏற்படுத்தாமல் தடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு தசாப்தத்திலும் சவுதி அரேபியாவின் வெப்பநிலை 0.4 C அதிகரித்து வருவதாகவும், மோசமான வெப்பநிலையை கையாள அங்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என பல தரப்பு கருத்துக்கள் தெரிவிக்கின்றன.
Also Read: 40 வயதுக்கு மேல் கர்ப்பம் சாத்தியமா? ஆரோக்கியத்தில் கவனிக்க வேண்டியவை என்ன?