Crime: காப்பீடு பணத்திற்கு ஆசைப்பட்ட கணவன்.. மனைவியின் உடலில் பாம்பு விஷத்தை செலுத்தி கொலை..
திருமணம் ஆனால் கணவன் மனைவிக்குள் சண்டைகள் வருவது சகஜம் தான். ஆனால் பேசினால் தீராத பிரச்சனை இல்லை. உத்தராகண்ட் மாநிலத்தில் அப்படி ஒரு தம்பதியினர் இடையே சண்டை வந்துள்ளது. மேலும் மருத்துவ காப்பீடுக்கு ஆசைப்பட்டு மனைவியின் உடலில் பாம்பு விஷத்தை ஊசி மூலம் செலுத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலத்தில் காப்பீடு பணத்திற்காக ஆசைப்பட்டு மனைவியின் உடலில் பாம்பு விஷத்தை ஊசியால் செலுத்தி கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம், ஜாஸ்பூர் உதய்சிங் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபம் செளத்ரி. இவரின் மனைவி சலோனி. இந்தத் தம்பதிக்கு திருமணமாகி 12 வருடங்களுக்கு மேலாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சலோனி உயிரிழந்தார். அப்போது முதலே சலோனியின் உயிரிழப்புக்கு சுபம் தான் காரணம் என்று அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சலோனியின் சகோதரர் அஜித் சிங் ஜாஸ்பூர் காவல்நிலையத்தில் மீது புகாரளித்துள்ளார்.
மேலும் படிக்க: நடிகை டாப்ஸி காட்டம்… நடிகர் நாகர்ஜுனா வேதனை… டாப் சினிமா செய்திகள்!
இது தொடர்பாக அஜித் சிங் கூறுகையில், “ கடந்த சில மாதங்களாக சலோனி மற்றும் சுபம் இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த 4 வருடங்களுக்கு முன் சுபம் திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபட்டுள்ளார். அப்போது முதலே பிரச்சனை இருந்து வந்துள்ளது. சமீபத்தில் சலோனி ரூ.25 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு எடுத்திருந்தார். அதில் நாமினியாக சுபம் இருந்துள்ளார். இந்த மருத்துவ காப்பீடு பணத்தை பெறவே சலோனியை கொலை செய்துள்ளார்” என தெரிவித்தார்.
ஜஸ்பூர் காவல் நிலைய போலீசார் இது தொடர்பாக கூறுகையில், “ முதலில் சலோனி மரணத்தில் சந்தேகம் இருந்தது. ஆனால் பிரேத பரிசோதனையில் சலோனியின் உடலில் பாம்பு விஷம் இருப்பது உறுதியானது. இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அந்த கோணத்தில் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சலோனியின் உடலில் பாம்பு விஷத்தை ஊசி மூலம் செலுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: இரண்டு நாட்கள் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயம்.. 8000 பேர் அனுமதி..
முதல்கட்டமாக சுபம் செளத்ரியை கைது செய்த போலீஸ், இந்த சம்பவத்தில் அவருக்கு உடைந்தையாக இருந்தப் புகாரில் சுபமின் பெற்றோர் மற்றும் ஒருவர் மீதும் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சலோனியின் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.